Monday, December 18, 2017

தமிழ் இருகைக்காக மிச்சிகன் நிதி திரட்டும் கூட்டத்தில் எனது உரை !!!

திரைகடல் ஓடி  திரவியம்  தேடிய  தமிழ்  இனத்தின் முதல் குடியேற்றம் வாணிபத்தால் வந்தது ,சீனத்துடனும், கிரேக்கத்துடனும் நமக்கு முன் தோன்றிய மூத்த குடி வணிக தொடர்ப்பு  கொண்டிருந்தனர் .

பின்  காலனி ஆதிக்கத்தின்   நிர்பந்தத்தால் கடின வேலை செய்வதற்காக   மலேஷியா , சிங்கப்பூர் , மியான்மர் , மொரிசியஸ் , தென் ஆப்பிரிக்கா , பிஜி  போன்ற ன்டுகளிலும் , தீவுகளிலும்  குடி அமர்த்தப்பட்டோம்  . உலகமயமாக்கலின்  தாக்கத்தால்  இரண்டாம்  பெருங்  குடியேற்றம் நமது கல்வியால் வந்தது , தமிழ் என்னும் இனத்தின் அறிவும் , கல்வியும் , இன்று உலகம் முழுவதும் நாம் பரந்து விரிய காரணமாய் இருந்தது .  

வாணிபத்தால் பயணிக்க ஆரம்பித்து , கல்வியால் நாம் பரவியுள்ளோம் , நாம் இப்படி இருக்க இது மட்டும் தான் காரணமா ? இல்லை  இதற்கு மூல காரணம் நமது மொழி , அது கற்றுக்கொடுத்த பண்பாடு , நம் இலக்கியங்களில் உள்ள வாழ்வியல் . பிறப்பொக்கும் எல்லா  உயிர்க்கும் என்பதை  நாம் வாழ்ந்தல்லவா காட்டி உள்ளோம் . 

எப்படி வாழ்வது என்பதை அறியாமல் அறிவியல் படித்து , உயிரியில் படித்து  , கணிதம்  படித்து அல்லது கணினி தான் படித்து என்ன பயன் , திருக்குறளை படித்தால் தானே வாழ்க்கைக்கான படிப்பு கிடைக்கும் ?

நாம் பள்ளியில் பாடமாக படித்தது , நம்மில் பலருக்கு பள்ளிப்படிப்பு முடிந்ததும் தமிழ் படிப்பதும்  முடிந்து விடுகிறது அல்லது  கணினி , கைபேசியில் உள்ள செயலிகலில் வரும் தரவுகளை படிப்பது என்று சுருங்கி விடுகிறது .

அது மட்டும் தான் தமிழ் ஆ ? தமிழா ?

எழுத்தசை , சீர்தளை , அடி தொடை  என வரைமுறை கொண்டு , எழுத்துக்கும் , சொல்லுக்கும் , பொருளுக்கும் , மட்டுமல்லாது ஒரு பாடலை எழுதுவதற்கு யாப்பு , அதில் சுவையை  சேர்ப்பதற்கு அணி  என இலக்கணம் கொண்டு,    ஒரு சிறு புள்ளிக்கும் மாத்திரை அளவு கொண்டு உள்ளது நமது தமிழ் . இந்த அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இம்மை அளவும் பிசகாமல் படைக்கப்பற்ற சங்க இலக்கிய நூல்கள் நமது மொழியில் உள்ளன . நேரம் எடுத்து எந்த பாடலை வேண்டுமானாலும் அளவிட்டு பாருங்கள் . வியப்பில் இருந்து மீள வெகு நேரம் பிடிக்கும் .

 இதனை நாம் கற்கவும் அதற்கும் பெருமை செய்யவும் வேண்டாமா .???



காலங்கள் மாற  மாற நமது மொழியும்  மாறுதலுக்கு உட்பட்டுள்ளது  ,  பிராமிய  எழுத்து , வட்டெழுத்தாக மற்றம் பெற்றது , பின்    வட்டெழுத்தாக இருந்தது  பல்லவர் காலத்தில்  மாறுதலுக்கு உடப்பட்டு  கிரந்த எழுத்துக்களை சேர்த்துக் கொண்டது   அவை எழுத்து சீர்திருத்தம்  பெற்று   தற்கால தமிழ் எழுத்துக்களாகின , இப்படி தலை முறை தலை முறையாக தமிழ்  மாற்றம் பெற்று , பல்வேறு பரிமாணங்களை  அடைந்துள்ளது . 


கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் காகிதத்தில் இருந்து கணினிக்கு வந்து இப்போது சங்க இலக்கியமும் கணினியில் கற்கிறோம்.



தமிழின் மீது  நமக்கு முன்னாள் இருந்த தமிழர்களின்   தேடல் , ஆர்வம் , வேட்கை நம்மை இங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது . இது அடுத்த பரிணாமத்துக்கு  கொண்டு   செல்லும் கடமை இப்போது நமக்கு உள்ளது. .


புலம் பெயர்ந்து , பல காலம் ஆயிற்று , எனது பிள்ளைகள் தமிழ்நாட்டையே வரைபடத்தில் தான் பார்த்திருக்கின்றனர் , எதுக்கு அடுத்த பரிமாணம் , அவர்கள் தமிழை படிப்பார்களா  என்றெல்லாம் கவலை நமக்கு  வேண்டியவதில்ல்லை ,


 ஏனெனில்  ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ் நமக்கு வசப்படுகிறதோ இல்லையோ , தமிழர்களாகிய நாம் தமிழுக்கு வசப்படுகிறோம் , நம் அடுத்த தலைமுறையில் மட்டும் அது நிற்கவா  போகிறது ?   நாம் அல்லவா   மேலும் செம்மையாக அவர்கள்  கற்க  அடித்தளம் அமைக்க வேண்டும் ? 

தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று சொல்லும் நிலை மாறி  தமிழ் படி எப்படி வாழ்வது என்று தெரியும் , தமிழ் படி உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றலாம் , தமிழ் படி  பிற நாட்டு   மக்கள் தமிழை விருப்ப பாடமாக படிக்கின்றனர்  , தமிழ் படி , கற்ற கல்வியும் , பெற்ற செல்வமும் , சுற்றமும் , சூழலும் மேம்படும்  என்று சொல்லும் நிலை வர வேண்டுமல்லவா ?

இதனை நோக்கி நம் தமிழ் சமூகம் பயணப்பட பாதை அமைத்து கொடுக்கும் ஹார்வர்ட் பல்கலை கழகத்தின் தமிழ் இருக்கை பற்றி அறிந்து கொள்ளவும் , அதற்கு மிச்சிகன் வாழ் தமிழர்களின் , மிச்சிகன்  தமிழ் சங்கத்தின்  முயற்சியையும்  வாருங்கள் நண்பர்களே தெரிந்து கொள்ளுவோம் .

நன்றி வணக்கம் !!!
https://youtu.be/rI8CDfwsx_Y

Thursday, September 28, 2017

மறைக்கப்படும் மனிதர்களின் நம்பிக்கைக் குரல் - (ஆசியாவின் நோபல் பரிசான Ramon Magsaysay விருது பெற்ற Mr .Besweda Wilson அவர்களின் உரை )

செப்டம்பர் 23 2017 - திரு வில்சன் அவர்கள் மிச்சிகன் யூனிவெர்சிட்டியில்  இந்தியாவில்  தீண்டாமையின் உண்மை நிலையை விளக்கி  Manual Scavenging in India - The Stark reality of Untouchability - எனும் தலைப்பில் உரையாற்றினார் .   

யார் இந்த வில்சன் என்று கேட்பவர்களுக்கு  - https://en.wikipedia.org/wiki/Bezwada_vilson .

இதில் கலந்து கொள்ளும் வரை   - மனிதக் கழிவை மனிதன் அள்ளும் கொடுமை இந்தியாவில் அவ்வளவு பரவலாக இல்லை , தொழில்நுட்பம் பெருகி விட்டது இப்போது  இந்த முறை வழக்கொழிந்து விட்டது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன் . 

இந்தியாவில் இன்றும் லட்சம் குடும்பங்களுக்கு மேல் இதில் இன்னமும் கட்டாயத்தால் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதும் , இதனை தடுக்க 1993 ஆம் ஆண்டே சட்டம் இருந்தாலும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்பதும் , இந்தியா அரசாங்கம் தொடர்ந்து  உலக அரங்கில் மறுத்தும் , உள்ளூரில் மறைத்தும் வருகிறது என்பது அதிர்ச்சியாக இருந்தது .

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான்   வில்சன் என்னும் மாமனிதர்  குடும்பம் மறந்து , தூக்கம் மறந்து மக்களின் மேம்பாட்டிற்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாது    போராடி வருகிறார் . 

சந்தித்து உரையாடும் போது  கருப்புச் சட்டைகாரர்கள் தானே நீங்கள்?  உங்கள் அமைப்பு (  பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம் அமெரிக்கா ) பற்றி  வந்தவுடன் அறிந்து கொண்டேன் என்று தமிழில் பேசி ஆச்சிரியப்படுத்தினார் .  எங்கெல்லாம் வேலை செய்தாரோ அங்கே இருந்த மொழிகளை பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை பின்பு கேட்டு அறிந்து கொண்டேன் .  

மிகவும் தன்மையான மனிதர் , தன்னம்பிக்கை தரும் கம்பீரம் , தீர்க்கமான வாதங்கள் ,  தான் எடுத்த நிலையில் தெளிவு , அநீதிக்கு எதிராக கண்களில் தெரியும் கோவம் , அது வார்த்தைகளில் வெளிப்படாமல் கோர்வையாக பேசும் பக்குவம் .     இப்படி  ஒரு மனிதரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு   மிச்சிகன் யூனிவெர்சிடியின் உளவியல் துறை பேராசிரியர் திரு.ராம் மஹாலிங்கம் அவர்களுக்கு   நன்றி சொல்ல வேண்டும் .

அவர் உரை முழுவதும் சுட்டெரிக்கும் கேள்விகள் , அரசாங்கங்களையும் , அதிகாரங்களையும் கேட்டு கேட்டு பதில் வராமல் போனதால் இன்னும் வேகமாக வந்து விழுகின்றன அவர் கேள்விகள் .   அவர் கேட்கும் கேள்விகள் மூலம்  உரையின் சாராம்சத்தை விளக்கலாம் என்று முயற்சித்திருக்கிறேன்.

 புறவாசல் வழியே வந்து , அதன் வழியே போகும் முகம் அறியாத  , நீங்கள்   அறிந்து கொள்ள விரும்பாத மனிதர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?   - Safai Karmachari Andolan அமைப்பை   நான் தொடங்கவில்லை , தான் இந்த நிலையில் இருப்பதை ஏற்றுக் கொள்ளாத நாராயண அம்மா , சரோஜினி போன்றோர் தான் இதற்கு முன்னோடிகள் . 

 ஒரு மனிதனை , அவன் மனிதத்தன்மையை அழிக்க  எவரோ ஒருவரின்  கழிவை  வெறும் கைகளால் சுத்தம் செய்ய சொன்னால் போதும் இதுதான் இந்த சமூகம் விரும்புகிறதா ?

 தீண்டத்தகாதவன் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது , நான் இதுதான்   செய்ய வேண்டும் என்று என் பிறப்பை கொண்டு முத்திரை குத்துவதற்கு நீங்கள் யார் ?

சட்டம் இயற்றி 23  ஆண்டுகளாகியும் ஒருவர் கூட கைது  செய்யப்படவில்லை . ஒருவர்இ மீது கூட வழக்கு பதிவு இல்லை ,தற்கான சட்டம் இருப்பதாவது அனைவர்க்கும் தெரியுமா ?

உலகின் அனைத்து   நாடுகளுக்கும் சென்று உரையாற்றும் பிரதமர் , இந்தியா நாடளுமன்றத்தில் இந்தியாவில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது என்பதையும் , சமூகம் தன் கொடூர கரங்களால் இந்த மனிதர்களை வதைக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள தயாராக உள்ளாரா ? 

தூய்மை இந்தியா , ஊழல் இல்லாத இந்தியா , கறுப்புப்பணம் இல்லாத இந்தியா , புல்லட்  , மெட்ரோ ட்ரெயின் என்று அனைத்துக்கும் தேதி குறித்து  செயல்படுத்தும் இந்தியா அரசாங்கத்திடம்      இந்த முறை எப்போது ஒழியும் என்பதற்கு பதில் உள்ளதா ? 

இதற்கு பதில் இல்லாமல் வளர்ச்சி பற்றி பேசுவது உண்மையான வளர்ச்சியா ?

ஒரு  ராக்கெட்டில் 104 செயற்கைகோள் செலுத்தும் இந்தியாவிடம் , மனித கழிவை மனிதன் தான்  அள்ள  வேண்டும் என்ற நிலையை மாற்ற ஒரு கண்டுபிடிப்பு கூட ஏன்  இல்லை ?

நாங்கள் கணக்கு எடுத்த  வரையில் எங்களுக்கு தெரிந்து 1470  பேர் இந்த வேலையில் விஷவாயு தாக்கி இறந்திருக்கிறார்கள் , தெரியாமல் எத்தனை   பேர் ?

இது இயற்கை    மரணமா  ? இல்லை அரசியில் படுகொலை .

2017 இல் - 54  பேர் தீவிரவாதத்துக்கு பலியாகி உள்ளனர் , ஆனால் 117  பேர் கழிவு அள்ளும்போது பலியாகி உள்ளனர் . அரசாங்கம் இதனை மறுக்கிறது . 10  மாடு செத்தால் தேசிய ஒற்றுமையும் , தலைப்பு செய்தியும் ஆகிறது , மனிதர்கள் இறந்தால் செய்தி வருகிறதா ??

எத்தனை பேர் கைகளால் மலம் அள்ளுகிறார்கள் என்ற கணக்கு   இல்லாத  ஒரு அரசாங்கம் , நாட்டில் உள்ள மாடுகளை கணக்கு எடுக்கிறது ?

100 % தலித்துகள் மட்டுமே இதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் , இது எந்த வகையில் நியாயமாக  படுகிறது ? 

படிப்பறிவு இல்லை , பணம் இல்லை அதனால் செய்கிறீர்கள் என்று நீங்கள் வாதிக்கலாம் ,  40  சதவீத மக்களுக்கு இந்தியாவில் படிப்பறிவு இல்லை , 50  சதவீதத்துக்கும் மேல்  உள்ள மக்களுக்கு பணம் இல்லை அனாலும் அவர்கள் அனைவரும் இதனை    செய்வதில்லை ஏன் ? 

தூய்மை இந்தியா என்று சொல்லும் அரசியல்வாதிகள் ,  man hole இல் இறங்கி ஒரு முறை சுத்தம் செய்ய தயாரா ?  ஆள் வைத்து குப்பையை கொட்டி , புகைப்படம் எடுக்க சுத்தம் செய்வதுதான் தூய்மை இந்தியாவா ?

நாட்டிலேயே இந்திய ரயில்வேதான் மனித கழிவை அள்ளுவதற்கு   நிறைய மக்களை நிர்பந்திக்கிறது    ஆனால் மத்திய அரசாங்கம் அதனை தொடர்ந்து மறுக்கிறது .

நீங்கள் வாழும் சமூகத்தில் மனிதனை மிருகத்தை விடவும் கேவலமாக நடத்துவதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா ?

இறுதியில் ஒரு தகவலை சொல்லி உரையை முடிக்கிறேன் .   காந்தி  அடுத்த பிறப்பில் தலித்தாக பிறக்க ஆசைப்பட்டாராம் , கோயம்பத்தூரில் உள்ள மணி , தான் வாழ்நாள் முழுவதும் மலம் அள்ளி ஜூலை முப்பது 2017 இல் ஓய்வு பெற்றார் அவர் சொன்னது நான் செய்ததை இந்த பிறப்பில் ஏன் தலைமுறை செய்யக் கூடாது .

எனக்கு காந்தி    சொன்னதைவிட  மணி சொன்னதுதான் முக்கியம் .

உரைக்கு பின் பெரியார் -அம்பேத்கர்  படிப்பு வட்ட நண்பர்கள் எங்களால் என்ன உதவி செய்ய முடியும் என்று  திரு வில்சன் உடன் ஆலோசித்தோம் ,  பண உதவி பெற்று சிலரை மீட்பதை விட  இதில்ஒ ஈடுபட்டுள்ள ஒரு  லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களை மீட்க வேண்டும் என்று தீர்க்கமாய் சொன்னார் .

தன் அமைப்பு மூலம்  அவர்  திரட்டிய கோப்புகளில் உள்ள தகவல்களை கணினி மயமாக்கவும் ,  இந்த முறையை    ஒழிப்பதற்கு  தொழில்    நுட்பம் தொடர்பான தகவல்களை பரிமாறுவதற்கும்  அவரிடம் பேசி உள்ளோம் . 

மிச்சிகனில் உள்ள சில நண்பர்களும் உதவி செய்வதாக இணைந்து உள்ளனர் . முதற் கட்டமாக எங்கள் மின்னஞ்சல்களை அவரிடம் பகிர்ந்து உள்ளோம் . ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்க   வேண்டும் அல்லவா ? 

நரகலின் கறை அழியாமல் படிந்திருக்கும் மனிதர்கள் நம்மை சுற்றி இருக்கும் சமூகத்தில் இருந்துகொண்டு , வல்லரசு என்றும் ,தூய்மை இந்தியா என்றும் எப்படி பெருமை பேச முடிகிறது  ???  (இது so called 56 inch மனிதர்களுக்கும் பொருந்தும் ). 



                                                                                                                                                                  -பாவி 
                                                                                                                                         paavib.blogspot.com

Tuesday, September 19, 2017

பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம் -மிச்சிகனில் நடத்திய பெரியார் பேச்சுப் போட்டி - தோற்றமும் , நிறைவும் கட்டுரையாக .

 பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் பெரியாரின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு ,இளையோருக்கான பேச்சுப் போட்டியை  நடத்தினோம் , மிகச் சிறப்பாக நடை பெற்ற நிகழ்ச்சியின்  கட்டுரை.

பெரியாரின் கருத்துக்களை அடுத்த தலை முறைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்ற கேள்வி படிப்பு வட்டத்தின் கலந்துரையாடலில் அதிகமாக கேட்க்கப்பட்டது . அதனை பற்றி உரையாடும்தபோது  தோழர் நிர்மல் பேச்சுப் போட்டி என்ற   யோசனையை முன் வைத்தார் . இது நல்ல கருத்தாக பட செய்யலாம் என்று முடிவெடுத்தோம் ,  பின் மிச்சிகன் மாகாணத்தின் உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கேட்கலாம் என்று முதல் புள்ளி உருவானது .

இதற்கான முதல் கூட்டம் , நம்புங்கள் - மிச்சிகனில் உள்ள ஒரு  பூங்காவின்  மரத்தடியில்  அமர்ந்து   விவாதித்தோம் .  பரிசுப் பணம் , எப்படி நடத்துவது , சில தலைப்புகள் , என்னென்ன முன்னேற்பாடுகளை செய்வது என்று அந்த கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது .

ஆனால் அனைவர்க்கும் இருந்த கேள்வி பெரியாரைப் பற்றிய பேச்சுப் போட்டி என்றால் ,  யாரேனும் பேச வருவார்களா என்பதுதான்  .  மிகுந்த யோசனைக்கு பிறகு  யாரும் பேச வரவில்லை என்றால் எங்கள் குழந்தைகளை வாழ்க பெரியார் என்ற அளவிலாவது பேச செய்வது , ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் வந்தால் கூட வெற்றி தான்  , என்ன   நடந்தாலும் நடத்துவது என்று முடிவு செய்தோம் .

அரங்கம் வேறு பதிவு செய்ய வேண்டும் , சரி   ,அதனை தள்ளிப்    போட   முடியாதென்று  மிகுந்த மன  தைரியத்துடன்  50 பேர் அமரும் அளவு ஒரு அரங்கத்தை பதிவு செய்தோம் .

என்ன என்ன தலைப்புகள் கொடுக்கலாம் என்று படிப்பு வட்டத்தில் பல்வேறு மாகாணங்களில் உள்ள தோழர்களை கலந்தோசித்து ஒரு வழியாக தலைப்புகள் முடிவாயின .

இனி மார்க்கெட்டிங் எப்படி செய்வது என்று யோசித்தோம் -  தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் விளம்பரங்ககளை தயார் செய்து  , படிப்பிய வட்டத்தினர் வசிக்கும்  மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் , இந்தியன் மளிகை கடைகள் , உணவகங்கள் என்று ஒவ்வன்றிலும் பேசி அனுமதி வாங்கி விளம்பரங்களை ஒட்டினோம் , எங்கள் படிப்பு வட்டத்தினரில் குழந்தைகள் கூட ஆர்வமாக இதில் பங்கேற்றனர் .இது  எங்களுக்கும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது  .

அனைத்து இடங்களிலும் விளம்பரங்களை வைத்தாயிற்று . மிச்சிகன்  தமிழ் சங்கத்தை தொடர்புகொண்டு , சங்கத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் மின்-அஞ்சலும் அனுப்ப ஏற்பாடு செய்தோம் .

இத்தனை   செய்தும் முதல் இரண்டு வாரங்கள் கனத்த மவுனம் . நாங்கள் எங்களுக்குள் தொலைபேசியில் அழைத்து அழைப்பு வந்ததா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டோமே தவிர ஒரு அழைப்பும்   வரவில்லை.
காலியான இருக்கைகளை வைத்து பிரம்மாண்ட வெற்றி என சில கட்சிகளை  போல நடிக்கவும் தெரியாது .

என்ன செய்யலாம்  என்று இருக்கையில் , வந்தன அழைப்புகள் (தோழர் திருமலை ஞானம் நண்பர்களிடம் பேசி முதலில் பதிவு செய்ய வைத்தார் ) . கொஞ்சம் கொஞ்சமாக , அழைப்புகள் வர  22 குழந்தைகள் வரை பதிவு செய்தனர் .

அரங்கம் நிரம்புமா என்ற நிலை மாறி  , அரங்கம்  போதுமா?  என்ற நிலை வந்தது . சமாளிப்போம் என செப்டம்பர் 16 ம் தேதிக்கு காத்திருந்தோம் .

அன்றைய தினம் , நிற்பதற்கு இடம் இல்லை , அத்தனை கூட்டம்  80 கும் அதிகமானோர் வந்திருந்தனர் . மிச்சிகன் தமிழ் சங்கத்தினர் ஆதரவு அளித்து , நிகழ்ச்சி முடியும் வரை உடன் இருந்தனர் .

முதல் நிலை , இரண்டாம் நிலை என்று இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 20 குழந்தைகள் பெரியாரின் கருத்துக்களை சுற்றி சுற்றி பிரித்து மேய்ந்தார்கள் . இளங்கன்று பயமறியாது அல்லவா ? பெரியவர்களை பேச சொன்னால்  தயங்கி சில கருத்துக்களை சொல்லி இருக்க மாட்டார்கள் , ஆனால் குழந்தைகள் எந்த வித தயக்கமும் இல்லாமல் பொட்டில் அடித்தாற்போல பேச பேச அருகில் இருந்த எங்களுக்கு  மகிழ்ச்சி சிறுது சிறிதாக ஊற்றெடுத்து கரை புரண்டு ஓட ஆரம்பித்தது . எதற்காக ஆரம்பித்தோமோ அது சேரும் இடத்தில் சேர்ந்து விட்டதாகவே நினைக்கிறோம் .

மூன்று நடுவர்களை அழைத்திருந்தோம் , மதிப்பெண்களை அவர்கள் வழங்க சிறு குழந்தைகளுக்கான பிரிவில் , புள்ளி அடிப்படையில்   தான் வேறுபாடு  , அதனால் இரன்டு சிறப்பு பரிசுகளையும் சேர்த்தி கொடுத்தோம் .

தோழர் நிர்மல் வரவேற்பு உரை நிகழ்த்தினார் , தோழர் பிரேம்  தமிழக விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கவும் , நீட் தேர்வை மாநிலப்   பட்டியலுக்கு மாற்றவும் , கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதலை கண்டித்தும்  ,நவோதய பள்ளிகளின் மூலம்  நடக்கும்    இந்தி  திணிப்பை எதிர்த்தும் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினார் . தோழர் பிரபாகர்   நிகழ்ச்சி முழுவதும் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்தார்.  தோழர் திருமலை ஞானம்  பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் தொடங்குவதற்கான தேவையையும் , செயல்பாடுகளையும் விளக்கினார் . தோழர் அன்பு நிகழ்ச்சியை படம் பிடித்தார் .

 பின் நடுவர்களையும் , நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரையும் பெரியார் பற்றிய அவர்களின் பார்வையை பேச அழைத்தோம் , மிகவும் சுவாரசியமாக அவர்களின் பேச்சு இருந்தது . அவர்கள்   தொடர்ந்து சிறப்பாக செயல்பட பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டத்தினரை கேட்டுக்  கொண்டனர்   இந்த மாதிரி படிப்பு வட்டங்கள் இன்றைய சூழலில் அவசியம் என்றும் கூறினர் .  நடுவர்களில் ஒருவர் தன் சொந்த வாழ்க்கையில் பெரியார் ஏற்படுத்திய மாற்றங்களை  பகிர்ந்து கொண்ட போது நிறைய பேரின்  கண்கள்  குளமானது .  பெரியார் என்ற மனிதனை பின்பற்றுவதற்காக பெருமையாக உணர்ந்த தருணம் அது .  அவர் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை எழுத அவரிடம் அனுமதி கேட்டிருக்கிறேன் , அவர் அனுமதித்தால் எழுதுகிறேன் .

 இறுதியாக என் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது .

அனைவரும் குழந்தைகள் என்பதால்   பேசின அனைத்து   குழந்தைகளுக்கும்  பரிசும் , சான்றிதழும் , நினைவுப் பதக்கமும் கொடுத்தோம் . அவர்கள் வாழ்க்கையின் என்றேனும் ஒருநாள் , தானாக தேடி பெரியாரைப் படிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது . இப்பொது நாங்கள் தேடி படிக்கிறோமே அதைப் போல , பெரியாரின் கருத்துக்கள் ஒரு தலைமுறையுடன் முடிந்து விடுவதில்லை , இது தமிழர்களிடையே தலைமுறை தலைமுறையாக தொடரும்  ஏனெனில் அவரின் கருத்துகளுக்காக தேவை எல்லா காலங்களிலும் உள்ளது .

Monday, September 11, 2017

முகம் தெரியாதவர்களுக்காக நான் ஏன் Neet ஐ எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் ?

செப்-1  அனிதாவின் மரணச்  செய்தி கேட்டதும்   வருத்தமே   மேலோங்கி இருந்தது , பின் வருத்தம் கோவமாக மாற  இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தோன்றியது . ஒத்த கருத்துள்ள நண்பர்கள் சேர அமெரிக்காவின் மிச்சிகன் - நோவி நகரில் இரங்கல் கூட்டம் செப்-2  இல் நடத்தினோம் . செப் -10  இல் ரோசெஸ்டர் நகரில் இரண்டாவது கூட்டம் நடத்தினோம்

இரங்கல் கூட்டமாக மட்டும் இல்லாமல் , நீட் என்றால் என்ன ? அதன் பாதிப்புகள் முதலியவற்றை விளக்கும் நிகழ்வாகவும்  இருந்தது  .  தொடர்ந்து நண்பர்கள் நீட் பற்றிய விளக்கங்களை  கொண்டு செல்வதற்காகவும்   அதன்  பாதிப்புகளை விளக்கவும்  , கல்வியாளர்கள் , நீதிபதிகள் , சமூக அக்கறை உள்ளவர்கள் , நீட் ஐ எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள்  ஆகியோரை பல்வழி அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டு விளக்க கூட்டங்களை நடத்துகிறார்கள் .  அடுத்த கட்டமாக அமெரிக்காவில் 40   இடங்களுக்கு மேலாக  நடந்த இரங்கல் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கையெழுத்துக்களை சேகரித்து , இந்தியன் consulate  கு பெட்டிஷன் ஆக கொடுக்கவும்  முடிவு  செய்துள்ளார்கள் .

இந்த இரண்டு வாரங்களுக்குள் whatsup  இல் ஆதரித்தும் எதிர்த்தும் நிறைய தரவுகள் . எதிர்த்து வந்தவை அதிகம் .

நீட் ஐ எதிர்க்கும் அனைவரும் , கட்சி சார்பானவர்கள் , நாமக்கல்லில் பள்ளிக்கூடம் நடத்துபவர்கள் , பிண அரசியில் செய்பவர்கள் , தனியார் மருத்துவ கல்லூரிகளினால் பயன் அடைபவர்கள் , அதனால் பாதிக்கப்பட்டு இடம் கிடைக்காமல் போனவர்கள் அல்லது தன் சுற்றி உள்ள நெருங்கிய உறவினர்கள் பாதிப்படைந்ததால் சுயநலத்துக்காக குரல் கொடுப்பவர்கள் என நிறைய சித்தரிப்புகள் நடந்தன , நடக்கின்றன .

நான் நீட் ஐ எதிர்க்க மேல சொன்ன எந்த காரணமும் இல்லை .

நீட் போராட்டங்கள் தமிழகத்தில் திட்டமிட்டு முடக்கப்படும் நிலையில் , தொலைக்காட்சிகள் , பத்திரிகைகள் சிலவற்றை தவிர்த்து பெரும்பாலும்     இச் செய்திகளை ஒளிபரப்பாத தருணத்தில் , பரபரப்புக்கு எல்லாரும் எழுதும் போது  நாமும்    எழுதலாம் என்று இரண்டு வாரங்களுக்கு முன்   எழுதாமல் இப்போது எதற்கு    எழுத வேண்டும்  ?   ஒரே காரணம் - தமிழகதில் இது அடக்குமுறைக்கு உள்ளாகும் போது
புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுக்க  வேண்டும் என்பதால் ,  இது நீர்த்து போகக்கூடாது
 என்பதால் எழுதுகிறேன்  .

மேல சொன்ன எந்த   காரணமும்  இல்லை என்றால் நீட் ஐ எதிர்த்து முகம் தெரியாத அனிதா போன்றோருக்காக நான் என் குரல் கொடுக்க வேண்டும்  ?? என்ன அவசியம் ?

முகம் தெரியாத யாரோ போராடியதன் பலனாகத்தான்  அரசாங்க பள்ளிகள் வந்தன - நான் படிக்க முடிந்தது .
முகம் தெரியாத யார், யாரோ  கொடுத்த நன்கொடையால்தான் - என் பள்ளி கட்டிடம் உருவானது .

முகம் தெரியாத எவரோ எடுத்த முடிவில்தான் - முதன் முறையாக , அரசாங்கப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் சேர்க்கப்பட்டது .

முகம் தெரியாத வேலை வெட்டி இல்லா யாரோ  செயல்படுத்தியதன் விளைவாக - கல்லூரியில் முதல் தலைமுறை பட்டதாரிக்கான ஊக்கத்தொகை கிடைத்து படிக்க முடிந்தது .

முகம் தெரியாத எனக்காக -  அவ்வளவு பழக்கம் இல்லாத  என் கல்லூரி சீனியர்கள்  CIT கல்லுரி     என்று பெயர் கேட்டதும்    எடுத்த இரண்டு மணிநேர நேர்முகத் தேர்வு வகுப்பால்தான் என்னால் IT  நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடிந்தது .

நான் மட்டும் இல்லை  , முகம் தெரியதா எவர் எவரோ , செய்த செயல்களால்தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம் நண்பர்களே . அவர்களுக்கு நாம் திருப்பிச்  செய்ய முடியுமா ? நம்மை தெரிந்துதான் குல கல்வி முறை வேண்டாம் என்று எதிர்த்தார்களா?  பிறப்பால் மட்டுமே கல்வி என்று இருந்திருந்தால் ஒரு சமூகத்தை தவிர நாம் எல்லாம் படித்திருப்போமா ?

இதனால் நான் நீட் ஐ முகம்  தெரியாத என் தம்பி தங்கைகளுக்காக , என் தமிழ் மாணவர்களுக்காக , பொருளாதார வசதி அற்ற என் சமூகம் ஆரம்ப சுகாதார நிலையங்களை இழந்து விடக் கூடாது என்பதற்காக , என் கிராமங்களில் மருத்துவ வசதி இல்லாமல் போய்  விடக்கூடாது என்பதற்காக , நான் , நாம் நீட் ஐ எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் .

நம் முகம் தெரிவதோ , யாருக்காக நாம் எதிர்கிறோமோ அவர்கள் முகம் நமக்கு தெரிவதோ முக்கியம் இல்லை , நம் எதிர்ப்புக் குரல் தொடர்ந்து கேட்பதுதான் முக்கியம் .

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களே , வாருங்கள் பதாகை தாங்கி உரக்கச் சொல்வோம் நீட் எங்களுக்கு வேண்டாம் !!!!!!!!!!!!!!!!!

                                                                                                                          -பாவி

Friday, August 18, 2017

கேள்விக்கென்ன பதில் !!! - முழிகதை

என் அருமை மகள் அவள் அம்மாவின் மூலமும் , கார்ட்டூன்களின்  மூலமும் எண்களை கற்றுக் கொண்டிருக்கிறாள்.

 ஆனால் கேள்வி கேட்டு முழிக்க  வைப்பது மட்டும் என்னிடம் . அறிவாளி என்று நினைத்து கேட்கிறாளோ இல்லை எப்படியும் தெரிய போவதில்லை கேட்டு வைப்போம் என்று கேட்கிறாளோ  தெரியவில்லை .

நங்கள் சென்ற கடையில்  நிறைய lane கலில் எண்கள்  இடம் பெற்று இருந்தன .  அதனை பார்த்துக் கொண்டிருந்த மகளை நானும் சேர்ந்து பார்க்காமல் என்ன  கண்ணு பார்க்கிறாய் என்று கேட்டுவிட்டேன் , அமைதியாக இருந்திருக்கலாம் .

அப்பா 1  , 2, 3  , 9  வரைக்கும் ஒரு நம்பர் போட்டிருக்குது , ஏன் 10 , 11 ரெண்டு நம்பர் போட்டிருக்குது ?

கொஞ்சம் எளிமையான கேள்வி என்று நினைத்து சொன்னேன் , தங்கம் இது  ஒரு digit number 0 to 9 ,  10 , 11 , two digit number . என்று சொல்லி காலரை    தூக்கி வீட்டுக் கொண்டேன்  (பதில் சொல்லி விட்டோம் என்ற பெருமையில் )   . கேள்வியே அதற்கு அப்புறம்   தான்  என்று தெரியாமல் .

இல்லைப்பா , 1 to 9 ஒரு  தடவை தான் சொல்லுறோம் , டென் , elevenum  ஒரு தடவை தான் சொல்லுறோம் , அப்புறம் நம்பர் மட்டும் ஏன் ரெண்டு போடுறோம் சொல்லுப்பா .

அப்போது இருந்து இப்போ வரை முழித்துக் கொண்டிருக்கிறேன் . இது எல்லாம் ஏன் எனக்கு இவ்வளவு வருடமாக தோன்றவில்லை ? இதற்கு என்ன பதில் சொல்வது ?

தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டு அடுத்த கேள்விக்கு  காத்திருந்தேன் . அப்பா சாக்லேட் சாப்பிடலாம் வா என்று அழைத்தாள்   அருமை மகள் . இதற்கு மட்டும் தான் நீ பிரயோஜனம் என்று சொல்லுகிறாளா இல்லை நிஜமாலுமே கூப்பிடுகிறாளா என்று  தெரியவில்லை ,ஆனால்   சாக்லேட் நன்றாக இருந்தது .

திரு. கார்த்திகேய சிவசேனாதிபதி” -அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்

மிச்சிகன்     தமிழ் சங்கத்தின் மூலம் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

இந்த நிகழ்ச்சிக்கு அரங்கம்  நிரம்பிய கூட்டம்.நம்  மக்கள் தம் குழந்தைகளுடன்  வந்து பங்கேற்றனர்.

அவரை இதற்கு முன் சந்தித்து பேசியிருந்தாலும் , மறுபடியும் கலந்து கொள்ளலாம் என்ற ஆவலில் கலந்து கொண்டேன். ஜல்லிக்கட்டு என்றவுடன் , எல்லாரும் போல நாங்களும் ஒரு சிறு போராட்டத்தை மிச்சிகன் aburn hills  பகுதியில் அரங்கேற்றினோம் ஆனால் அதனால்    என்ன பயன் என்று தெரியாமல் இருந்தது . என் புருசனும் சந்தைக்கு போனான் கணக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தேன் . விடை இதில் தெரிய வந்தது.

வெளிநாடு வாழ் தமிழ் மக்கள்  நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு   நன்றி சொல்லி  தொடங்கினார் . ஒவ்வொரு நாளும் மத்திய அரசாங்கத்திடம் உளவுத்துறை அறிக்கை சமர்பிக்குமாம் . அதில் தவறாமல் இடம் பெற்றவை , வெளிநாட்டில்  இருக்கும் தமிழர்கள் நடத்திய போராட்டம் . இது மிகப் பெரிய அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுத்தது என்ற தகவலை கூறினார் . ஏதோ நாமும் ஒரு சிறு பங்களித்தோம் என்று மனதின் ஓரத்தில் ஒரு திருப்தி வந்தது .( வரலாறு முக்கியம் அல்லவா ?  )

 அதன்  மூலம் மத்திய அரசாங்கத்திற்கு  தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தம், தடை நீங்க எடுக்கப்பட்ட முயற்சிகள் , தமிழகத்தின் இன்றைய அரசியில் சூழ்நிலை , அதனால் ஏற்படும் ஆதங்கம் ,மாட்டு அரசியில், தம் அமைப்பின் மூலம் செய்து வரும் பணிகள் , உணவுப் பொருட்களின் மீது நடைபெறும் வணிக வன்முறையை
அவர் விவரிக்கும் போது இனி தொழிற்சாலைகளில்  நாம் உண்ணும் பழவகைகள்   முதற்கொண்டு தயாரிக்கப்படுமோ என்று அச்சமாக இருந்தது .

 வளர்ச்சித் திட்டங்கள்  என்ற பெயரால் விவசாயிகள் சந்திக்கும் அடக்குமுறை , அதனால் ஏற்படும் விளைவுகள் முதலியவற்றை விரிவாகவும்  தெளிவாகவும் விளக்கினார்.

 காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்காமல் விட மாட்டார்கள் போல . உணவை இழந்துவிட்டு , தண்ணீரை மாசுபடுத்தி விட்டு  வளர்ச்சியை வைத்து என்ன செய்வது ?   ஏன் தமிழகத்துக்கு மட்டும் இவை வருகின்றன ? காவிரியில் மீத்தேன் இருந்தால் கங்கையில் இருக்காதா என்ன ? ஏன் அங்கே போகவில்லை என்ற சிந்தனைகள் கிளை பரப்பி என்னுள் ஒடத் தொடங்கின.

#saveTamilnaduFarmer அமைப்பின் மூலம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு செய்து வரும் பணிகள்    எடுத்துரைக்கப்பட்டது.    அந்த குடும்பங்களை  விசாரித்து கண்டறிந்து அவர்களுக்கு தேவையான  வாழ்வாதார பணிகளுக்கும் , அக்குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்கும் இவர்கள் உதவி புரிந்து வருகிறார்கள் .

நடிகர்கள் சித்தார்த் மற்றும் பாலாஜி இவர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவி புரிகின்றனர். நல்ல முயற்சி . நம் மக்கள் ஆர்வமுடன் இந்த அமைப்பிற்கு நன்கொடை வழங்கினர்

பின் கேள்வி பதில் . விவசாயம் செய்ய போகிறேன் . மாடு வளர்த்தலாம் என்று ஆசை என்ன மாடுகளை வளர்த்தலாம்   என ஒரு தம்பதி கேட்ட கேள்விக்கு ,   நான் சும்மா சொல்லிட்டு போயிடலாங்க ஆனா நிலைமை சரியில்லை , இங்கே இருந்தாவது நீங்கள் அங்கே இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம் , அங்கே வந்து விவசாயம் செய்தால் உங்களை காப்பாற்ற நீங்கள் போராட வேண்டி இருக்கும் , தேவைகளை குறைத்து முழுமையாக ஈடுபட்டால் மட்டுமே முடியும் என்று மனதில் இருந்து பதில் கூறினார் .

.தமிழ் சங்கத்தின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

அரசாங்கங்கள் , அதிகாரவர்க்கம் , செயல் இழந்து போன இன்றைய நிலையில்   , தன்னார்வலர்கள்  நமது மொழி, மக்கள் என்று உள்ளுணர்வால் உந்தப்பட்டு செய்யும் சேவைகளே தமிழ்நாட்டை இனி காப்பாற்றும் . நமக்கான அரசியிலை இனி நாம்தான் செய்ய   வேண்டும் போல  . தலைவர்களை , கட்சிகளை நம்பி இருந்தது போதும் .

ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தொடர்ந்து தன்னாலான உதவிகளை செய்கிறார்கள் . இன்னும் ஐந்து அல்லது பத்து வருடத்தில் இவர்கள் சிறிது சிறிதாக உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி பெரிய அமைப்பாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது . பார்க்கலாம் .
                                                                                     -paavi
                                                                                   paavib.blogspot.com

Wednesday, August 9, 2017

இன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் -பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் (அமெரிக்கா )-ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு

பெரியார்- அம்பேத்கர் படிப்பு  வட்டத்தில் (அமெரிக்கா )-  பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள்   "இன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் " என்னும் தலைப்பில்   ஆற்றிய  சிறப்புச் சொற்பொழிவு .

இஃது தமிழகத்தில் இருந்து பல்வழி அழைப்பின் மூலம் பேராசிரியர் தொடர்பு கொள்ள,   july 21 2017  , திருவள்ளுவர் ஆண்டு 2017 ஆடி - 5 இல் நடைபெற்றது .

மதவாதம் அல்லது மதச்சார்பின் வரலாற்றில் இருந்து தொடங்கி , எப்போது மத மோதல்கள் தமிழ்நாட்டுக்கு
 வந்தன , இதில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு , அதற்கான காரணங்கள் , மதவாதம் என்பது எத்தனை  கொடிய  நோய்,  அது பரவுவதனால் ஏற்படும் வீழ்ச்சி , முதலியவைகளை அலசி , கேட்போருக்கு விளங்கச் செய்து , அதனை தடுப்பதற்கான வழிகளை சரளமாக  சொல்லி முடித்து  என  தங்கு தடை இன்றி ஓடும் ஆற்று நீராய் அமைந்தது சொற்பொழிவு .

சொற்பொழிவுக்கு பின் , கேள்வி நேரம் - பங்கேற்றோர் கேட்ட கேள்விகளுக்கு   பொறுமையாகவும் , தெளிவாகவும்  பதில் உரைத்தார் . கேள்வி நேரம் தொடங்கும் முன் , தன் உரையை அனைவரும் கேட்க முடிந்ததா என்பதை ஆர்வமுடன் கேட்டுத்  தெரிந்து கொண்டார் . ஆர்வமும் , தேடலும் தான் இவர் போன்றவர்களை அயராது உழைக்க வைக்கிறது போல .

இனி சொற்பொழிவின் சாரம் : முடிந்த அளவு அனைத்தையும் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன் .

சமய நம்பிக்கை சங்க காலத்திலேயே இருந்தது .முதன் முதலாக ,மதங்களுக்கு இடையே   விவாதங்கள் , கருத்துக் பரிமாற்றங்கள்  நிகழ்ந்ததாக  மணிமேகலை காப்பியத்தில் தான் பார்க்கிறோம் .36 மதங்களைச்  சார்ந்தவர்கள் ஒரே மேடையில் பேசிய காட்சி  மணிமேகலையில்  இருக்கிறது. பின் மதங்களின் அடிப்படையில் இலக்கியங்கள் உருவானதும் , ஒரு மதத்தை ஏற்றும் , எதிர்த்தும் உரையாடல்கள் உருவானதும்  நிகழ்வுகள். ஐம்பெரும் காப்பியங்களில் கூட சிலப்பதிகாரம் வரையில் ஒரு குறிப்பிட்ட
தாக்கத்திற்கு உட்பட்டதாக இல்லை .

மத மோதல்கள் தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் வருகின்றன. அதுவும் கூட இந்து மதத்தின் பிரிவுகளான சைவம் , வைணவம் இதன் இரண்டுக்கும் இடையே தான் தொடங்குகிறது . தேவாரம் , திருவாசகம் போன்றவற்றில் , சமணம் - பௌத்தம்  இரு பிரிவினருக்கும்  நடந்த  மோதல்கள் வருகின்றன , பிற்காலத்தில் மோதல்கள் அரசு சார்ந்து -அரசன் சைவம் என்றால் வைணவத்திற்கு எதிராகவும் , வைணவம் என்றால் சைவத்திற்கு எதிராகவும் கடுமையான மோதல்கள் நடை பெற்றிருக்கின்றன.

ஆதி சங்கரர் காலத்திற்கு பிறகு தான் தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன .
சைவம் , வைணவம் , ஸ்வாதம், க்ராணபத்யம் , கௌமாரம், சவ்ரம் (பெயர்களில் பிழை இருந்தால் பொறுத்தருள்க அவர் சரியாகத்தான் சொன்னார் எனக்குத்தான் இலக்கிய மேற்கோள்களையும் , பெயர்களையும் சரியாக எழுதத் தெரியவில்லை  ) என்ற ஆறு பிரிவுகளையும் ஒன்றிணைக்க முயற்சி செய்தார் . அதனால் அவர் சன்மதஸ்தாபகர் என்று அழைக்கப்பட்டார் . இந்து மதம் இந்த ஆறு உட்பிரிவுகளைக்   கொண்டது (சிவன் , திருமால் , விநாயகர், சக்தி ,குமரன்  , கதிரவன் ஆகியோரை வணங்குபவர்கள் ).பிற்காலத்தில் ஆங்கிலேயர் வந்த பிறகுதான் அந்த இணைப்பு முழுமை அடைந்தது .(Hindu law).

இடைக்கால சோழர்கள் பெரும்பாலும் சைவ மதத்தை பின்பற்றினார்கள் என்றாலும் அவர்கள் ஆட்சிக் காலத்திலேதான் சைவ மடங்கள் இடிக்கப்பட்டன என்பது முரணான செய்தி . காரணம் ராஜ குருக்களாக இருந்த பிராமணர்கள் , சூத்திரர்களால் கட்டப்பட்ட மடங்களை , அரசனுக்கு அறிவுரை கூறி இடித்தார்கள், இது வரலாற்றில் குகைஇடிக் கலகம் என்று அறியப்படுகிறது .(இடிப்பதை அப்போதே செய்திருக்கிறார்கள் - எனது இடைச்சொருகல் ). அப்படியானால் இப்பொது இருக்கும் மடங்கள்? அவை வைணவர்கள் கட்டினார்கள் என்பது இன்னொரு முரண் .இவற்றைத் தாண்டி  இந்து முஸ்லீம் மோதலாக மாற்றம் பெற்றது , கி.பி பதினோராம் நூற்றாண்டு என்று கூற வேண்டும் .(கஜினி முகமது படையெடுப்பு  கி.பி 1026). அப்பொழுது இருந்துதான் ஒரு பகை உணர்ச்சி உருவாகத் தொடங்கியது.

இந்தியாவின்  மதம் சார்ந்த நிலமையில்   , வட மாநிலங்களுக்கும் , தென் மாநிலங்களுக்கும் வேறுபாடுண்டு , குறிப்பாக தமிழகத்தில் வட மாநிலங்களில் நடைபெற்றதைப் போல  இந்து முஸ்லீம் மத மோதல்கள் அதிகம் நடை பெறவில்லை , முகலாய ஆட்சி நூற்றாண்டுகளாக வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் இல்லை என்ற வரலாற்று பின்புலம் இதற்கு காரணம். முகலாய சாம்ராஜியம் கர்நாடகம் வரை வந்தும் தமிழகத்திற்கு வரவில்லை , அந்த காலங்களில் தமிழகத்தில் நாயக்கர்களின் காலம் . இந்துத்துவ , பிராமண கருத்துக்கள் "கொடி கட்டி" பறந்த காலம். பல்லவர் காலத்தில் தொடங்கி , சோழர்கள் காலத்தில் வளர்ந்து , நாயக்கர்களின் காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. பின் ஆங்கிலேயர்கள் வந்தார்கள்.

சிவாஜி இந்துக்களின் காவலன் என்றும் , இஸ்லாமிற்கு எதிரானவர் என்றும் இன்றைக்கும் கூட  ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி தொடர்கிறார்கள் , அது உண்மை அல்ல , சிவாஜி மத நம்பிக்கை கொண்டவர்தான். அனல் மத வெறி கொண்டவர் அல்ல .முகலாய ஆட்சிக்கு எதிராக அவர் தன் மண்ணை மீட்க போராடினார் , இந்து ஆட்சி நடந்திருந்தாலும் அவர் அதைத்தான் செய்திருப்பார் , தன் படைத்தலைவர்களாகவே அவர்  இஸ்லாமியர்களை நியமித்திருந்தார் .(இப்ராஹிம் கான் -பீரங்கிப் படைத்தலைவர் , கப்பற்படை -தவுலத் கான் ) .

அதே போல ஔரங்கசீப்  பற்றி பல தவறான தகவல்கள் சொல்லப் படுகின்றன .அவர் மிக ஆழ்ந்த மதநம்பிக்கை உடையவர் அனாலும் அவர் மத மதங்களை அழித்தார் என்பது மிகையாக சொல்லப்படுகின்ற செய்திதான்.காசி மடம் அமைப்பதற்கு ஔரங்கசீப்  பெரிய பொருளுதவி  செய்தார் என்று குமர குருபரர் குறித்திருக்கின்றார். இந்தியாவில் மத மோதல்கள் திட்டமிட்டு வளர்க்கப்பட்டன .

ஆங்கிலேயர் வந்த பிறகு கிருஸ்துவ சார்பும் எதிர்ப்பும் உருவாயிற்று. தமிழுக்கு அவர்கள் அனைவர்க்கும் கல்வியையும் , நூல்களையும் வழங்கினார்கள் என்ற ஆதரவும் , மதம் மாற்றினார்கள் என்ற எதிர்ப்பும் இருந்தன. வளங்களை  எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மைதான் .

ஆனால் அவர்கள் செய்த மிகப்பெரிய தொண்டு ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட நமக்கு கல்வியின்  கதவுகளை திறந்துவிட்டனர். மெக்காலே கல்வி முறையை இன்றைக்கும்   விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள்  . நம்மை குமாஸ்தாக்களாக ஆகி விட்டார்கள் என்பது குற்றச்சாட்டு . உண்மைதான் . நாம் எதனை நினைவு  கொள்ள வேண்டும் ?

 அது அரசர்களாக இருந்த நம்மை குமாஸ்தாக்களாக மாற்றவில்லை , அடிமைகளாக இருந்த நம்மை குமாஸ்தாக்களாக மாற்றியது .அடிமைகளாக இருப்பதை  விட இது ஒன்றும் இழிவானதில்லை.

பின் இந்திய விடுதலை போராட்டம் தொடங்கிய நிலையில் இந்து முஸ்லீம் மோதல்களும் தொடங்கின. முதன் முதலாக கிலாபத் இயக்கம் பரவியபோதுதான் ஒரு மாற்றம் நிகழ்ந்தது .மேலை நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து துருக்கியை காப்பாற்ற தொடங்கிய இயக்கம் இந்தியாவிற்கு வந்த பின் , காந்தி ஆதரவு அளித்தார் . கிறிஸ்துவத்துக்கு எதிராக இந்து முஸ்லீம் இணைந்து நடத்திய போராட்டமாகவும் இது பார்க்கப்பட்டது.

பின் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது .இதில் இந்திய காங்கிரசும் , கிலாபத் இயக்கத்தினரும் இணைந்தே போராடினர் சிறைக்குச் சென்றனர் . காவலர்கள் எரிக்கபப்ட்டதற்காக காந்தி இதனை நிறுத்தினர் .அதற்குப்பின் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் குறைந்தது .1923-1927 வரை இந்தியாவில் மிக கடுமையான ஹிந்து முஸ்லீம் மோதல்கள் நடைபெற்றன.அந்த நிலையிலும் அவை தமிழகத்தில் பரவவில்லை.நவகாளி கலவரம் ஏற்பட்டு  மிகப்பெரிய கலவரங்கள் ஏற்பட்ட போதும் அமைதியாக இருந்தது தமிழகம் மட்டும்தான்.

எப்படி தமிழகத்தில் இது பரவவில்லை என்பதற்கு முக்கியமான நேர்மையான காரணம் தமிழகத்தில் தான் திராவிட இயக்கம் தோன்றிப்  பரவியது ,அதனாலே தான் இன்று வரையில் மதவாதத்திற்கு தமிழகத்தில் இடமில்லை . இந்துக்களும் , முஸ்லிம்களும் , அண்ணனும் , தம்பியுமாய் , மாமனும் , மச்சானுமாய் தான் இன்று  வரை இருக்கிறன்றனர் . அனாலும் தமிழகத்தில் கூட 1981 இல்  கன்னியாகுமரியை அடுத்த மண்டைக்காட்டில் ஏற்பட்ட மத மோதல் மெல்ல  மெல்ல திட்டமிட்டு பரப்பப்பட்டது .இபபோதும் அது திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியின் போது வீடுகளில் இருக்கும் பிள்ளையார்கள்   வீதிக்கு வந்து ஊர்வலமாக போகும்போது , மத மோதல்களுக்கான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.அவை மசூதிகளுக்கு அருகில் வரும் போது , பெரிய பிளவிற்கான வாசற் கதவுகள் திறந்து விடப்படுமோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது .

 மதவாதம் அன்புக்கு எதிரானது , அமைதிக்கு எதிரானது , ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்ற காரணத்தால் இதனை எதிர்க்க வேண்டிய , தமிழ்நாட்டை விட்டு அகற்ற வேண்டிய கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அதற்குத்தான் பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டங்கள் உதவ வேண்டும் என்று கருதுகிறோம் .

மதத்தை ,வழிபாட்டு முறையை   , அல்லது எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருப்பது என்ற முடிவை எடுப்பது  அவரவர் விருப்பம் , உரிமை . ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை பகையாக , எதிராக பார்ப்பது மதவாதம் .

அது  தமிழ்நாட்டில் துளிர் விட்டிருப்பதை நாம் கவனமாக பார்க்க வேண்டும் . அது வளராமல் தடுக்க கருத்தொற்றுமை உள்ளவர்கள் கட்சி வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டிய கடமை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்றது. அவரவர் வழியில் கருத்துக்களை பரப்பவும் , ஒற்றுமையாக இருக்கவும் , இந்த   அமைதிக்கான போராட்டத்தில்  எங்களோடு தோளோடு தோள் நின்று இணைய வேண்டும் , உதவ வேண்டும் என்று கேட்டு , இந்த அரிய வாய்ப்பை தந்த பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்திற்கு எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி !!!!

கேள்வி நேரம் :
 கேள்வி :  ஐயா வங்கத்தில் நவகாளி  நடந்த கலவரத்தில் இறந்தவர்கள் யார் ?

பதில் : ஒரு  லட்சம் இந்துக்களும் , ஒரு லட்சம்  இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டார்கள் என்று தவறாக படிக்கின்றோம் , உண்மையில் அதில்  இரண்டு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்று  அடுத்த தலைமுறைக்கு சொல்லுங்கள் .  நவகாளி முழுவதும் பயணப்பட்டு காந்தி செய்த அதே தியாகத்தை காந்தியோடு முழுமையாக இருந்த  எல்லைக் காந்தி என்று அழைக்கப்படுகிற    கான் அப்துல் கபார் கான் பற்றி நாம் படிப்பதில்லை, காந்தி  அளவுக்கு அவரின் பெயர் சொல்லப்படுவதில்லை  . அவரின் தியாகமும் அளப்பரியது .

கேள்வி  : ஐயா நவகாளி கலவரத்திற்கு தமிழகத்தில் இருந்து காவல்துறை அழைக்கப்பட்டதற்கும் , மோதல்கள் இல்லாமல் இருந்ததற்கும் , திராவிட    இயக்கம்  தான் என்று எப்படி சொல்லுகிறீர்கள் ? திராவிட இயக்கம் அப்போது முழுதாக வளரவில்லையே ?  ஒற்றுமை தமிழரின் கலாச்சரம் சார்ந்தது என்று நம்புகிறேன் எப்படி திராவிட இயக்கம் காரணமாயிற்று ?

பதில் :கலவரம் தொடங்கியது 1946 நவம்பர் , திராவிட இயக்கம் என்ற பெயரில் தொடங்கியது 1944 நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கான வேர்கள் 1913 இல் நடேசனார் தொடங்கிய திராவிடர் சங்கத்திலேயே ஆரம்பித்து விட்டது , 1914 இல் நீதிக்கட்சி , 1926 இல் சுயமரியாதை இயக்கம் .எனவே முப்பது ஆண்டுகளும்கும் மேலாக திராவிடக் கருத்துக்கள் தமிழ்நாட்டில் பரவிக் கொண்டிருந்தன .

 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் சமயத் துறையும்  இருந்தது , சைவ , வைணவ மோதல்களும் இருந்தன . மோதல்களில் இருந்து ஒற்றுமை வருவதற்கு திராவிட இயக்கம் பெரும் பங்காற்றியது என்பது என் கருத்து. என் கருத்தில் இருந்து வேறு படுவதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது .


கேள்வி : நான் அடிப்படையில் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுகிறேன் , ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு , பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் பங்கேற்பது சாத்தியமா ? சமீபத்தில் உணர்வு ரீதியான தூண்டுதல்கள் நடைபெறுகின்றன , உணர்வுகளுக்கு ஆட்படமால் அறிவுப்பூர்வமாக , சட்டரீதியாக    இதை
எதிர்கொள்வது எப்படி ?

பதில் : இஸ்லாமியர்  அல்ல , யார் வேண்டுமானாலும் , எந்த மதத்தில் இருந்தாலும் , இல்லை  மதமே இல்லை என்றாலும் சேர்ந்து   பணியாற்றலாம். பெரியார் அம்பேத்கர் இருவரையும் இணைக்கும் மையப்புள்ளி அவர்கள் சமூக நீதிப்  போராளிகள் என்பதுதான் .மத சார்போ , எதிர்ப்போ இல்லை. பிறப்பின் அடிப்படையில்  வேறுபாடு கூடாது  என்று நினைக்கும் எவரும் சேர்ந்து பணியாற்றலாம் .

திட்டமிட்டு பரப்பப்படும் மத மோதல்கள் , இந்திய சட்டத்தை எதிர்த்துதான் பன்னப்படுகிறதே தவிர சட்டத்திற்கு உட்பட்டு இல்லை .இந்திய அரசியில் அமைப்புச் சட்டம் எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது இல்லை .
கேள்வி : ஐயா  சமீபகாலமாக இந்துத்தவா குரல்கள் அதிகமாக ஒலிப்பதற்கு என்ன காரணம் .மத்தியில்  இருக்கும் ஆட்சியா  , மாநிலத்தில் இருக்கும் கைப்பாவை அரசா , திராவிடம் தமிழர்க்கு எதிரி என்ற பரப்புரையா?

பதில் : நீங்கள் சொன்ன எல்லாமும் காரணம் , திராவிடம் என்பது சமூக நீதியை வலியுறுத்துவது .திராவிடம் தமிழர்க்கு எதிரி என்பதற்கும் , இந்துத்தவா கருத்துகளுக்கும்    உள்ள நோக்கம் ஒன்றுதான் அது திராவிடத்தை அழிப்பது.

கேள்வி : திராவிடம் என்பது நான்கு மாநிலங்களை சேர்ந்தது ஆனால் அது தமிழ்நாட்டுக்கு மட்டும் சுருங்கி போனது ஏன் ?

பதில் : திராவிடம் தமிழ்நாட்டில் பிறந்து , தமிழ்நாட்டில் வளர்ந்து , தமிழ்நாட்டில் இருக்கும்  இயக்கம் அது என்றைக்கு மற்ற மாநிலங்களில் கிளை பரப்பியது ? பெரியார் தெளிவாக திராவிட நாடு என்று கூறுவது தமிழ்நாட்டைதான் என்று கூறினார் , ஒரு சொல் பல அர்த்தத்தை தருவதிப் போல திராவிடம் என்ற சொல் நான்கு மாநிலத்திற்கான நிலப்பரப்பை குறிக்கும் . ஆனால் நாம் திராவிடம் என்று சொல்வது சமூக  நீதியை வலியுறுத்தும்  நிலைப்பாட்டை   கொண்டவர்களை .

கேள்வி : எழுபது ஆண்டுகளாக இருந்தும் பகுத்தறிவு கருத்துக்கள் மக்களிடையே பரவலாக போய் சேரவில்லையே  இதன் காரணம் என்ன ?

பதில் : உண்மைதான் , ஒரு நூற்றாண்டு காலம் தொண்டாற்றியும்  ஏன் இன்னும் மக்களிடையே சாதி இருக்கிறது , பக்தி இருக்கிறது , மூட நம்பிக்கை   இருக்கிறது திராவிட  இயக்கம் என்ன செய்தது என்று கேட்ப்பீர்களானால்  இவைகள் எல்லாம்  2000 ஆண்டுகளாய் வளர்ந்திருக்கிற மரங்கள் , அவற்றை ஒரு நூற்றாண்டு வாள் கொண்டு அகற்றி விட முடியாது .இது ஒரு தொடர் போராட்டம் .

திராவிட இயக்கம் ஒன்றும் செய்யவில்லை என்பது தவறானது . தன்மானத்தை  கொண்டு வந்தது , சாதி பெயரை போட்டுக் கொள்வதை நிறுத்தத்   செய்தது ,கல்வியிலும் , வேலையிலும் இட   ஒதுக்கீட்டை உருவாக்கியது  (1920 களில் ) அதன் காரணமாகத்தான் நம்மால் கல்வி பெற முடிந்தது என்பதை மறுக்க முடியாது.  பெண் விடுதலை , இவற்றில் திராவிட இயக்கத்தின் பங்கு மிகப் பெரியது என்பதை மறுக்க முடியாது.

கேள்வி : ஐயா  மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வளர்வதற்கு   திரவிடக் காட்சிகள் மாற்றி மாற்றி வைத்துக் கொண்ட கூட்டணியும்  முக்கியமான காரணம் என்று நினைக்கின்றேன் இனிமேலாவது அது நடக்காமல் இருப்பதற்கு  ஏதாவது உத்திரவாதம் இருக்கிறதா ?

பதில் : இயக்கம் கட்சி ஆகும் போது அதன் பலம் மற்றும்  பலவீனங்களும் சேர்ந்தே வரும் . தேர்தல் என்று மக்களிடையே போகும்போது சமரசங்களை செய்து கொள்ள வேண்டி இருக்கும் . தேர்தலில் வெற்றி ஒன்று தான் இலக்கு என்று ஆகிறது . ஆதலால் கட்சிகள் தடம் புரண்ட காட்சிகள் நடந்திருக்கின்றன. இனி மேலும் நடக்காது என்று நான் கூறுவது நேர்மையாகவும் இருக்காது . ஆனாலும் நமக்கான கடமை கட்சிகள் அவ்வாறு போகாமல் பார்த்துக் கொள்வது .

திமுக  விற்கும் பாரதிய ஜனதாவிற்குமான போட்டியாக தமிழ்நாட்டின் களம் போகிறது . இன்றைய அதிமுக  நசிந்து வருகிறது அதை பாரதிய ஜனதா விழுங்குகிறது .ஆதலால் கண்ணுக்கு எட்டிய வரை அது நடக்காது என்பதை உறுதியாக கூற முடியும் .

கேள்வி : இளைய தலைமுறை இணையத்தில் இருந்தாலும் எங்களை போன்றவர்கள் (முந்தைய தலைமுறை ) என்ன செய்ய முடியும் என்று சொல்லுங்கள்.

பதில் : இன்றைய அரசியல் மேடையில் இருந்து இணையத்திற்கு வந்து விட்டது . தமிழ்நாட்டில் கூட பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்கள் வருவதில்லை . அவர்கள் இணையத்தில் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள் எனவே சமூக வலைத்தளங்களில் இணைந்து பெரும் தொண்டாற்ற உங்களால் முடியும் அதனை நீங்கள் செய்ய வேண்டும் .

கேள்வி :தமிழ் தேசியம் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தையும் , பெரியாரை இனத் துரோகி என்றும் கொச்சை படுத்துவதற்கான அடிப்படை காரணம் என்ன ?

பதில் : காரணம் தேடுவதை விட அதனை முறியடிப்பதற்கு நாம் ஒன்றுபடலாம் . இது ஒன்றும் புதிது இல்லை  .என்றைக்கு திராவிட இயக்கம் தொடங்கியதோ அன்றைக்கே அதற்கு எதிரான பரப்புரையும் தொடங்கி விட்டன .ம போ சி அவர்களும் , ஆதித்தனாரும் தமிழகம்    முழுவதும்   எதிர்த்து பரப்புரை செய்திருக்கிறார்கள். பின் இரண்டு பேரும் திமுக கழகத்தில் இணைந்தார்கள் .  இது குறித்து அஞ்ச வேண்டியதில்லை , அதற்காக பணிகளை ஆற்றாமல் இருக்க வேண்டியதும் இல்லை .

கேள்வி  நேரம் முடிந்தது.

                                                                                                                                                                                                                                                                                - பாவி
                                                                                                         paavib.blogspot.com 

Tuesday, August 8, 2017

மிச்சிகன் தமிழ் சங்கம் கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியின் தொகுப்பு

தமிழ் சங்கத்தின் "கோடை கொண்டாட்டம் "  நிகழ்ச்சிக்கு    தமிழ் மக்கள்  பெரும் திரளாக   திரண்டு வந்து சிறப்பித்தனர். அறநூறுக்கும் மேற்ப்பற்றோர் பங்கேற்ற நிகழ்ச்சி maybury state park இல் நடைபெற்றது . பெரும்பாலான வட்டாரத்  தமிழ்ச்சொற்களை கேட்க முடிந்தது  மிக்க மகிழ்ச்சி .

ஒருங்கிணைப்பாளர்கள்   நுழைவாயிலிலேயே   வருபவர்கள் பதிவு செய்யவும் , தமிழ் சங்கத்தின் உறுப்பினர் கால அளவை புதுப்பித்துக் கொள்ளவும் , புதிதாக சேரவும்  அரங்கங்களை அமைத்திருந்தனர். தமிழ் சங்கத்தின் செயல்பாடுகளையும் , உறுப்பினர்களுக்கு தரப்படும் சலுகைகளையும் விளக்கும்   தட்டிகளை வைத்திருந்தது நல்ல உத்தி.

11.30 க்கு தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே கூட்டத்திற்கு குறைவு இல்லை.   வருபவர்கள் தம் கொண்டு வந்த உணவுப் பதார்த்தங்களை அணிவகுத்து வைக்க  தாமதிக்காமல் பந்தியை தொடங்கி விட்டனர் .

அருமையான உணவு வகைகளின் கதம்பம் ,கேழ்வரகுக்கூழ் , கம்மங்கூழ் கூட நெடுநாட்கள் கழித்து சுவைத்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது . உணவுத் திடலில் கூட்டம் சேர்ந்து நீண்ட நேரம் அனைவரும் வரிசையில் நிற்காமல் இருக்க , நிர்வாகிகளும் , தன்னார்வலர்களும் , ஒலி பெருக்கியின்  மூலம் சரிபடுத்திக் கொண்டே இருந்தார்கள் .

நிகழ்ச்சியில் அதிக கவனம் பெற்றவை குழந்தைகளுக்கான விளையாட்டுகள் தான் . பங்கேற்ற குழந்தைகள் விதிமுறைகளுக்கு  சம்பந்தமே இல்லாமல் விளையாடி  ஒருங்கிணைப்பாளர்களை நன்றாக குழப்பி அசத்தினார்கள்.

எடுத்துக்காட்டுக்கள்   சில .

Cup- cake eating - கேக்கை சாப்பிட்டு விட்டு ஓடி இலக்கை தொட வேண்டும் என்பது விதி , சுவை பிடித்ததாலோ என்னவோ , சற்றே பெரிய குழந்தைகள் உண்டுவிட்டு ஓடி   விட , சிறிய குழந்தைகள் நிறுத்தி நிதானமாக அமர்ந்து சுவைத்துக் கொண்டே இருந்தார்கள் . கடைசி வரை நகரவில்லை .

அடுத்து பஞ்சு உருண்டைகளை மூக்கால் ஒரு குவளையில் இருந்து எடுத்து இன்னொரு குவளையில் போட வேண்டும் என்பது விதி . தமிழ்ச்சங்கத்தின் இளையோர் அணியினர் விதிமுறைகளை நீண்ட நேரம் விளக்க , பெற்றோர்கள் அதனை விட பயங்கரமாக தம் குழந்தைகளுக்கு விளக்க , குழந்தைகளோ பஞ்சு உருண்டைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர் . யார் பேச்சையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை .

ஓட்டப் பந்தயம் - நிறைய குழந்தைகள் இருந்ததால் அணி அணியாக ஓட செய்யலாம் என்று முடிவு செய்து , முதல் அணியை ஓடச்  சொன்னால் , அனைத்து   அணியில் இருக்கும்   குழந்தைகளும் ஓடி , பின்னாலயே பெற்றோரும் அவர்களைப்  பிடிக்க ஓடி வெகு சிறப்பாக அமைந்தது .

சிறு விண்ணப்பம் - நம் குழந்தைகளுக்கு தமிழ் மிகவும் சிரமப்பட்டுத்தான் வருகின்றது, அழகு தமிழ் பேச பெற்றோர்கள் நாம்தான் பழக்க வேண்டும்  ( அவர்களின் ஆங்கில சொற்பிரயோகங்கள் எனக்கு பல சமயம் புரியவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன் )

விளையாட வயதில்லைதான் - வாலிபால் , கோ-கோ , எறி  பந்து ? (throw ball ) , நம் பாரம்பரிய விளையாட்டுகளான தாயம் , பல்லாங்குழி ,  பரமபதம் , கபடி  , கயிறு இழுத்தல்  முதலியவற்றை   குழந்தைகள் ஆர்வமுடன் பார்க்க பெரியவர்கள் அதிலேயே மூழ்கிப் போயினர் . பின்னோக்கி  ஒரு நினைவுப் பயணம் செய்திருப்பார்கள் போல .குறிப்பாக கபடியின் விதிமுறைகளை பெரியவர்கள் கூட திரும்ப திரும்ப கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

தன்னார்வலர்கள் , நிர்வாகிகள் மற்றும்  இளையோர்அ ணியினரின்  (youth  committee  :) )  சிறப்பான பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை .

இறுதியில்  தமிழ்ச்சங்கத்தின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது .

முதல் தடவை பங்கேற்கும் பெரும்பாலோனர்க்கு (நான் உட்பட ) மற்றவர் அறிமுகமில்லை எனினும்
தயக்கத்துடன் கூடிய சிறு புன்னகையோ , தலையசைப்புகளோ , சம்பிரதாய பேச்சுக்களோ  நமக்கு நாமே கட்டிக்கொண்ட கூட்டிலிருந்து எடுத்து வைக்கும் முதல் அடி, அவை    இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க பங்கேற்க, புதிய அறிமுகங்களாகவும் , கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் , எதிர் கருத்துக்களை விவாதிக்கவும் , இலக்கிய ஆராய்ச்சி களமாகவும் , ஓர் அணியாக  நின்று சமூகத்துக்கு உதவி செய்யும் வாய்ப்பாகவும் கூட பரிமாணிக்கும் திறன் பெற்றவை .

இந்த நிகழ்ச்சியில் கூட  கடைசி நேரங்களில் , கோடை கொண்டாட்டம் என்ற பொதுக்கூட்டத்தின் உள்ளே , அறிமுகமானவர்களைக் கொண்டு   சிறு  சிறு தனிக்கூட்டங்கள் நடைபெற்றத்தைக் காண முடிந்தது .

தமிழ்  என்னும் தளத்தில் ஒன்றிணைய தமிழ்ச்சங்கம் களம் அமைத்துக் கொடுக்கின்றது , வாருங்கள் நண்பர்களே பயன்படுத்திக்கொள்வோம் .

                                                                                    பாவி
                                                                                   paavib.blogspot.com 

Thursday, July 20, 2017

யாதுமாகி -7

வைகறைப் பொழுது 
நனையும் பூமி 
குடை பிடித்துக்கொண்டே 
நடந்தேன்! 
மகளும் மனைவியும் 
உடன் இருந்திருந்தால் 
மழை பிடித்திருப்போம் !!! 

                                                 -பாவி

Tuesday, July 11, 2017

மனம் சுறுக்கிகள் !!!

மனனம் செய்து 
வாந்தி எடுத்து 
பட்டம் பெற்று 
பண்பை மறந்து 
பணத்தை பெருக்கி
அறிவைத்  தொலைத்து 
திரைகடலோடி 
சாதியம் தேடும் 
மனம்  சுறுக்கிகள் !!!

                                    -பாவி 
                                     paavib.blogspot..com 

Tuesday, July 4, 2017

வட அமெரிக்கத் தமிழ் சங்கப்பேரவை fetna 2017 - ஒரு பார்வை

படிக்கும் முன் முன்னுரை - நான் எந்த விதமான சாரிகளையோ , இசங்களையோ சேர்ந்தவன் இல்லை . 

வட அமெரிக்கத் தமிழ் சங்கப்பேரவை விழா-2017 என்று கேள்விப்பட்டதும் வழக்கம் போல மற்றும் ஒரு விழா , நிறைய போரடிக்கும் இருந்தாலும் பரவாயில்லை புதிய மனிதர்களை சந்திக்கலாம் என்றுதான் போனேன் . 

ஆனால் இந்த விழாவில் நிறைய ஆச்சிரியகரமான இல்லைகள். 

குத்துவிளக்கு இல்லை , கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லை , பரதநாட்டியம் இல்லை , மூன்று நாட்கள் விழாவில் எங்கேயும் கடவுள் படங்கள் இல்லை , எல்லாவற்றுக்கும் மேலாக , புரியாத மொழியில் ராக ஆலாபனைகளும் , கண்ணா , கிருஷ்ணா என்று நீண்ட நேரம் யாரும் கூப்பிடவும் இல்லை . 

முற்றிலும் மாறாக ,திருக்குறள் , நாட்டுப்புற பாடல்கள் , பொய்க்கால் குதிரை , கரகாட்டம் , மயிலாட்டம் , கும்மி , இலக்கிய வினாடி வினா , மழலைகளுக்கான எழுத்து , குறள் போட்டிகள், அதிசியமாக சில ஒப்பாரிப் பாடல்கள், அதிகாரப் பறை முழக்கம் , மருதநாயகம் (மேடை நாடகம் ) என கலந்துகட்டி அசரடித்தது இவ்விழா . 

அது மட்டுமா , ஈழத்து தமிழர்களின் வலியையும் , விளிம்பு நிலை மக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் , தமிழ் நாட்டின் தற்போதைய அரசியல் நிலமையும் , நம் மக்களின் மீதும், வளங்களின் மீதும் , , விவசாயத்தின் மீதும் , திட்டம் போட்டு ஒடுக்க பார்க்கும் நுண்ணிய காழ்ப்புணர்ச்சியை தூண்டும் அரசியலையும் உணர்ந்து கொள்ளும் களமாகவும் அமைந்தது . 

நல்ல துவக்கம் ! இந்தப் போக்கு பரவ வேண்டும் , தொடர வேண்டும் . 

பறை இந்த விழாவின் தேசிய ஒலி என சந்தேகத்துக்கு இடமில்லாமல் குறிப்பிடலாம் !!! அரங்கு அதிரும் வண்ணம் திரும்பத் திரும்ப ஓங்கி ஒலித்தது பறை . 

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒலியாக இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக மாறி அனைவரும் கற்றுக்கொள்ள விரும்பும் வாத்தியமாக இருப்பது பெருமைக்கு உரியது . உடுக்கையையும் கொஞ்சம் சேர்த்து கொண்டீர்களானால் மிக்க மகிழ்ச்சி ! 

விழாவில் பகிரப்பட்ட முத்துக்கள் சில . யார் என்ன சொன்னார் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் . 

தயவு செய்து ரஜினியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அடாதீர்கள் ! ஒருவர் அப்படி என்றால் சினிமா உலகில் அறிவு ஜீவி என்று மதிக்கப் பட்ட இன்னொருவர் அந்தரங்கத்தை நிறைய கேமிரா கொண்டு ஒளிபரப்புகிறார் ! 

தமிழ் இலக்கிய ஆராய்ச்சி கழகத்திற்கு நிதி ஒதுக்கியும் , அதை அரசாங்கம் மறந்தும் வெகு காலம் ஆகிவிட்டது . 

தமிழர்களுக்கு ஆவணப் படுத்துதல் என்றால் என்னவென்றே தெரியவில்லை . 

தமிழ் இலக்கியங்களில் உள்ளவற்றில் பக்தி வேண்டும் என்றால் பக்தியை பாருங்கள் , பக்தி புடிக்கவில்லை 
என்றால் தமிழின் செழுமையை பாருங்கள் , ஆனால் முற்றிலுமாக ஒதுக்கி விடாதீர்கள் . 

மக்களின் வாழ்க்கையையும் , நடந்த உண்மைகளையும் அப்படியே சொல்வதுதான் நாடகம் திரித்துக் கூறுவது இல்லை . 

தமிழின் பெருமையையும் , இலக்கியங்களையும் இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் . 

உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டால் அரசாங்கத்துக்கு செயல்பட்டே ஆக வேண்டிய மிக பெரிய அழுத்தத்தை தரலாம் . 

சில சமயம் எதிர்ப்பாராத தருணத்தில் , பிரபலங்களை விட நம் சந்திக்கும் அசாதாரண மனிதர்கள் எளிதாக நம் பார்வையை முற்றிலுமாக மாற்றிவிடுவார்கள் . இது fetna வில் நான் பங்கேற்ற கலந்துரையாடல்களில் எனக்கு நேர்ந்தது . 

முடிவுரை : 

தமிழர்களாகிய நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம் . 

சாதி , மத வேறுபாடுளையும் . தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு பிளவைத் தூண்டும் பைத்தியக்காரர்களையும் ஒதுக்கிவிட்டு நாம் தமிழ்நாடு அழிந்து போகாமல் இருக்க ஒன்றுபட வேண்டிய நேரமிது !!! 

எந்த தேவதூதனும் நமக்காக குதித்து விடப் போவதில்லை !!! பெரியார் பூமி என்பதை அழுத்தமாக நாம் நமக்கே நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . 

fetna வில் சந்தித்த ஈழத்து சகோதரியின் குரல் இன்னும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது . " ஈழத்து தமிழர்களை தமிழ்நாடு காப்பாற்றும் என்று நம்பி கொண்டிருந்தோம் , ஆனால் இப்போது தமிழ்நாட்டை யார் காப்பாற்றுவது ?" 

                                                                                                                       - பாவி
                                                                                                                paavib.blogspot.com

தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ ? -Fetna 2017 கவியரங்கத்துக்கு தேர்வான கவிதை !!!



ஐம்பெரும் காப்பியங்கள் பெற்று
சீரான இலக்கணங்கள் கொண்டு
இயல் இசை நாடகமாய்
உச்சம் தொட்டு
வாழ்வியலை அகம் புறம்
எனப் பிரித்து
பொதுமறை தன்னை வழங்கி
எண்ணிலடங்கா
செறிவான  ஆன்றோர்
இயற்றிய தரமான நூல்கள்
கொண்டு ஆர்ப்பரித்த
நம்மொழி  சற்றே  அயர்ந்துள்ளது !!

கவலை வேண்டாம் !
காலம் கடந்து விடவில்லை
தமிழை நம் தலைமுறை
முற்றிலும் தொலைத்து விடவில்லை
பேச்சுத் தமிழ்
மறைந்து விடவில்லை
தமிழும் சடைந்து விடவில்லை
தமிழரும் தன் மொழியை
விட்டு விடவில்லை !!!

கடந்த காலங்களில்
தமிழர்தம் கிறுக்கல்களை
கையேட்டில் எழுதி வைப்பர்
பின்
பெட்டகத்தில் பூட்டி வைப்பர்
நினைவுப் பயணம்
முன்னும் பின்னும்
அலையாட அவை
வாழ்க்கை   ஓட்டத்தில்
மறைந்து போகும்
அல்லது
மறந்து போகும் !!!

இன்றைய தமிழின்
களம் வேறு !!!
காகிதத்தில் இருந்து
கணினிக்கு வந்து
ஆகிவிட்டது
ஆண்டுகள் பல !!!
இனி
கணினி
இருக்கும் வரை
தமிழ்  இருக்கும் !!!

இணையத்தில்
முன் எப்போதும்
 இல்லா வண்ணம்
எழுதிக் குவிக்கின்றனர்
எனினும்
தலைப்புக்கள் போதவில்லை
அதன் கருத்துக்கள்
தலைக்குள்ளும் போகவில்லை !!
இது
தமிழின் பயணத்தில்
மற்றுமொரு இளைப்பாறல்
அவ்வளவே !!!
தமிழரும் -
தமிழை உறங்கப் போடவில்லை
உறைக்குப் போட்டிருக்கிறார்கள்
கெட்டுவிடாது!!
 தமிழ்
நம்மைச்  சற்றும் விடாது !!!

கிறுக்கல்கள் ஓவியமாகும்
அவை வரும்காலத்தில்
தமிழர்க்கு நவீன
காவியமாகும்     !!!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
தன்னை தானே புதுப்பித்துக்கொண்டு
நிலை கொண்டிருக்கும்
நிகரில்லாத நம் மொழி
தலைமுறைக்கு  தலைமுறை
தமிழர்களை ஈர்த்துக்கொள்ளும்
அவர்களுக்கு
மொழி வசப்படுமோ என அறியேன்
ஆனால் மொழிக்கு வசப்படுவர்!!!
ஆரம்பமும் முடிவும் இல்லாத
முடிவிலி இது !!
                                                                                         -  பாவி 

Monday, June 26, 2017

நிலவன்


நிலா  என்ன பெண்ணாக இருக்க வேண்டும் ? ஒரு வேளை  ஆணாக  இருந்தால் ?   ஆண் என்றால் நாம் வைத்துக்கொண்டால் ?
ஆண் ஏன் பெண்  என்று மாற்றப்பட்டது ???   ஒரு காரணம் வேண்டும் அல்லவா?  இதோ அந்த காரணம்



நிலவன்

முப்பத்து முக்கோடி 
தேவர்களில் ஒருவனாம் 
"நிலவன்" !!! 
காதல் கவிதை 
ஒன்றை 
முயற்சி செய்து 
ரம்பைக்கு அளிக்க !! 
கண்டுகொள்ளாத ரம்பை 
தனக்கு வந்த 
ஆயிரம் கடிதங்களில் 
ஒன்றைக் காட்ட !! 
வெம்பிப்போன நிலவன் 
சபதம் ஒன்று போட்டான் 
கோடி கடிதங்கள் எனக்கும் 
வரணும் என !!! 
அவன் பொல்லா நேரம் !!! 
அருகிலிருந்த ரம்பையின் 
தோழி 
"தாதுஸ்து" சொல்ல 
மனிதன் நிலா என்று 
அகராதி தன்னில் 
அறியாமல் பதிக்க 
அவன் அவள் ஆக 
நிலவன் பெண்பால் கொண்டு 
நிலா ஆனான் !! 
எனினும் 
நெருப்பில்லாமல் புகையாது 
என்ற ஆன்றோர் சொல்படி 
ஆராய்ந்து பார்த்தால் 
பூமி பெண் 
பூமித்தாய் !!! 
நிலமகள் என நிறைய உதாரணங்கள்!!! 
பூமிப் பெண்ணை 
மற்றுமே சுற்றி வரும் 
நிலா ஆண் 
இல்லாமல் வேறு என்ன ?? 
பூமி (மனைவி / காதலியை) சுற்றி வரும் 
ஆண்மகன் நிலவன் (நிலா ) !!! 

- பாவி

Wednesday, June 21, 2017

யாதுமாகி -6

 நீண்ட தனிமையை
படம் பிடித்து
சொல்கிறது
மெத்தை
மீது இருக்கும்
ஒற்றைத்
தலையணை

                        - பாவி 

யாதுமாகி -5

கைபேசியில்
மகளின்
ஒலியும் !ஒளியும்!
"நெய் ஊற்றி
காய் போட்டு "
காற்றினில் கையை
நீட்டி
சிலிர்த்துக் கொள்கிறேன்
நான் !!!

                    - பாவி 

Monday, June 19, 2017

யாதுமாகி -4

மகளின் விளையாட்டு 
அறை!! 
வரும் தேதி 
தெரிந்தும் 
கடக்கும் பொழுதெல்லாம் 
தேடித் தவிக்கும் 
பார்வை 
வெறுமையின் எச்சங்கள்!!! 

                                                        - பாவி

யாதுமாகி-3

கண்ணாடி முன் 
நிற்கும் கணம் 
அகவை சுருங்கி 
சிறுவன் தெரிய 
காதுகளில் கேட்கும் 
குரல் தளும்பும் 
விசும்பல் ஓசை !!! 

                                 - பாவி 

யாதுமாகி -2

கலைந்து கிடக்கும்
பொம்மைகளை
பார்த்த வண்ணம்
கலைந்து போகிறேன்
மகள் வந்து
எடுப்பாள் என
பொம்மையாய் பிறப்பது
பேரதிர்ஷ்டம் !!!

                                  -பாவி 

யாதுமாகி-1

மனைவி ,மகள் விடுமுறைக்கு இந்தியா சென்றுவிட , தனிமையின் பிடியில் உணர்வுகளின் தொகுப்பே இந்த யாதுமாகி . 

முடிவிலா நிசப்தம் !! 
கடிகார முள்ளின் 
இடைவிடா சத்தம் 
மனதை வியாபிக்க 
மலைப்பாம்பு 
இரையை விழுங்குவதை 
போல 
மெல்ல மெல்ல 
இறுக்குகிறது 
தனிமை !!!! 
                                     - பாவி

Monday, June 5, 2017

ரசமவதே ஜெயக !!!



  ரசமின்றி அமையாது இவ்வுலகு !
சிற்றின்ப வாழ்க்கையில் பேரின்பம் காண 
மிளகு , தக்காளி , பருப்பு , பூண்டு , புளி என வகைகொண்டு 
சித்தர்கள் தமிழ் உலகுக்கு அளித்தது ரசவாதம் 
என்னும் ரசம்  வைக்கும் முறையாம் !!! 
சூடு தண்ணீரில் புளி கலந்தால் ரசமில்லை தமிழ் நெஞ்சங்களே
 ஆய கலைகள் அறுபத்தி நான்கில் முதற்க் கலை ரசக்கலை!
திருப்பாற்கடலை கடைந்து எடுத்தது அமிர்தல்ல ரசம் தமிழ்  இனமே 
சிவபெருமான் விஷத்தை உண்டு ரசத்தைக் காத்தார்!
அரிதினும் அரிது நன்று கரைத்த பச்சைப்புளி ரசம் -அவ்வை பாட்டி அறிவுரையும் 
கடையில் வாங்கிய ரசப்பொடி வைத்து ரசம் வைப்போர் 
மக்கள் அல்ல மாக்கள்  என வள்ளுவர் பெருந்தகை வாக்கும் 
காதலாகி கண்ணீர் மல்கி ரசம் குடித்தேன் -மாணிக்கவாசகர் கூற்றும் 
ரசத்தை குடித்தேனே உயிரை வளர்தேனே என்று திருமூலரும் 
தமிழ் கூறும் நல்லுலகுக்கு விட்டுச் சென்ற ரசமொழிகளாம்!!
என் முப்பாட்டன் முருகப்பெருமானும்  
ரசத்துக்கு சண்டையிட்டு மலையேறினான்!
மாம்பழம் காரணம் என்பது 
திரிக்கப்பட்ட வரலாற்றின் கறுப்புப் பக்கமாம் !  உண்மையறிக உள்ளங்களே !
இஃது கேள்வி  ஞானமில்லை !  ஏட்டுச் சுரைக்காயுமில்லை!
மனைவி அம்மா வீடு சென்றுவிட 
விழி மேல் காலி ரசக்குண்டா வைத்து  ஏக்கம் கொள்ளும்
கணவனின் மனக் குமுறல்கள் என்றரிக!
ஆதலினால் மகாஜனங்களே நினைவில் கொள்க 
ரசமில்லா வாழ்வு விஷமாகும் !!!
                                                             -பாவி 
                                                               paavib.blogspot.com

ஆதலினால் காதல் செய்வீர் !!! (ஒரு non-காதல் கதை )

                   ஆதலினால் காதல் செய்வீர் !!! (ஒரு non-காதல் கதை )

கலிபோர்னியா  bevarly hills  , 20th century fox  , 24 ஆவது மாடியில் வேலை செய்து கொண்டு  "james cameron " போல பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கும்போது விதி விளையாடியது .

நான் வேலை செய்த ப்ராஜெக்ட் சீனாவுக்கு போக ,  ஒரே இரவில் corn field  மட்டுமே இருக்கும் iowa  க்கு  மாற்றப்பட்டேன் .  இந்தக் கதை  அங்கு தொடங்குகிறது .

பொது நலன் மற்றும் அதை விட அதிகமாக " சேவல் பண்ணை " கையில் மாட்டினால் என்ன ஆகும் என்ற சுயநலமும்  கருதி அனைத்து பெயர்களும் தவிர்க்கப்பட்டுள்ளன. 

iowaaaaa 2009 to  2010 காலகட்டம் :  ஒரு வால்மார்ட் , ஒரு இந்தியன் ரெஸ்டாரண்ட் , ஒரு இந்தியன் grocery  , ஒரு mall , கணக்கில்லாத corn feild .இதுதாங்க அயோவா.

 தமிழ் படம் பார்க்க வேண்டும் என்றால்  அயோவா க்கு மிக அருகில் 317 மைல் தள்ளி இருக்கும் சிகாகோ விற்குத்தான் போக வேண்டும் .

அந்த ஊரில் ஒரே ஒரு கம்பெனி xxxxxxx  .  அதில்  தேவை இல்லாத அனைத்து ஆணிகளையும்  எடுக்கும் மகத்தான பணியில் xxx Limited and xxxxx  Limited ஈடுபட்டிருந்தன .

இரண்டு  நிறுவனங்களுக்கும் சேர்த்து 15 பேர் வேலை (?)செய்தோம் . அனைவருமே ஆண்கள் .  அங்கே இருந்தவர்களில் வயது அதிகமான வாலிபன் நான்தான் .

வருடத்திற்கு  நான்கு மாதங்கள் மட்டும் நிறைய வேலை இருக்கும் . எட்டு மாதங்கள் வெட்டி officers தான்.நாங்களே  எங்களுக்கு வைத்த பெயர்  "சேவல் பண்ணை ".(இதில் இருந்தே தெரிந்திருக்கும் எவ்வளவு வெட்டியாக இருந்து இருக்கிறோம் என்று ).

9 to 5 வேலை , மதியம் நீண்ட நடைப்பயிற்சி , மாலை முழுவதும் tennis கோர்ட். வாரம் ஒரு  முறை சபை கூட்டப்பட்டு உலக சமாதானத்துக்கு தேவையான அனைத்து யோசனைகளும் விடிய விடிய பகிரப்படும் . விடிந்தபின் என்ன பேசினோம் என்று எங்களுக்கே மறந்துவிடும் என்பதால் மறுபடியும் அடுத்த வாரம் இது தொடரும் .

இப்படியாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில் xxx Limited இல் ஒரு பெண் வந்து சேர்ந்தாள்.

Smurfette வந்த smurf village போல ஆனது அயோவா. 

 திடீரென்று சேவல் பண்ணையில் இருந்த முக்கால் வாசி பேருக்கு காதல் வந்தது .நான் உடனடியாக அலெர்ட் ஆனேன். முடிந்தவரை அந்த பெண் இருக்கும் பக்கமே போக கூடாதென்று .  நம்ம நேரம் ஏதாவது பேசும் போது "அண்ணா " என்று கூப்பிட்டால் கூட பரவாயில்லை ." uncle "  என்று சொல்லிவிட்டால்??? ஒரு சரித்திர அவமானம் நடந்து விடக்கூடாது  அல்லவா?

Day1 : 

          XXX அணி  ரூம் : அனைவரும் சாமியார் என்று நினைத்து கொண்டிருந்த MR A  , ரூமில் உள்ள அனைவரும் தூங்கி விட்டார்கள்  என்ற நினைப்பில்  அன்றைய தினம் SUNTV யில் வெளியான நித்தியானந்தா ரஞ்சிதா பக்திப் படத்தைப் பார்க்க :

       காதல் வெள்ளம் மனதில் ஓடியதால் தூங்காமல் இருந்தவர்கள் வெளியே வந்து MR A வை பார்க்க விழுந்தது முதல் விக்கெட் .
        
  XXXXX அணி ரூம் : இங்கும்  காதல் ஆசை கட்டுக்கடங்காமல் போய் MR B சேவல் பண்ணை அனைவருக்கும் சமையல் செய்கிறேன் என்று தக்காளி சாப்பாடு செய்தான்.

என்ன நினைத்து செய்தானோ சாப்பிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும்   வயிறு twist ஆகி  அனைத்து விக்கட்களும் பாத்ரூமில் விழுந்தன .

  Day 2 :

காதலில் விழுந்த  சேவல்கள் அனைவரும்  அந்த பெண்ணுடன் பேசுவதற்க்கான வாய்ப்பை உருவாக்க தீவிரமாக முயற்சி செய்ததின் விளைவாக  டென்னிஸ் தனியாக விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டேன் .
 தமிழ் பசங்களாச்சே !!! ஒருவனின் idea வில் இன்னொருவர் புகுந்து விளையாட  ஒருவரும் உருப்படியாக எதுவும் பண்ண முடியவில்லை .
வெறுத்துப்போனவர்கள் சண்டை போட tennis court க்கு வந்தார்கள் .  


Day 3 :

   நிலவரம் கலவரமாகி   ரணகளம் ஆனது tennis court . 

    XXX அணி :  இங்க பாருங்கடா எங்க கம்பெனி பெண் எங்களுக்குத்தான் 

 xxxxx அணி : சேவல் பண்ணை இப்படியே இருக்கணும்னுதான் நாங்க எந்த  பெண்ணையும் எடுக்கிறதில்லை தெரியுமா துரோகிகளா !! ( உண்மை எனக்குத்தான் தெரியும் )

சில பல சமாதானங்கள் , 5 பாக்கெட் malbaro , கணக்கில்லாத beer bottle களுக்குப்பிறகு ஒரு வழியாக சேவல்  பண்ணை சேர்ந்தது.

நான் ரேஸில் இல்லாத காரணத்தினால் ஒரு  நல்ல தீர்வை (?)சொன்னேன் .அனைவருமே ஒரு நிலையில் இல்லை என்பதால் ஒரு எதிர்ப்பும் வரவில்லை .

என்ன வேண்டுமேனாலும்  ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளாமல் 
செய்யுங்கள் . ஆனால் என்ன நடக்கிறது என்று என்னிடம் சொல்ல வேண்டும் ( வேறு வேலை இல்லை பாஸ் !!)  அப்புறம் success  , Failiure எது நடந்தாலும் treat வைக்க வேண்டும் (அதுதானே முக்கியம் ).

அதற்கப்புறம் ஒவ்வருவரும் செய்த பைத்தியக்காரத்தனங்களை  எழுதினால் ஒரு புத்தகமே  எழுத வேண்டும் . 700 வார்த்தைகள்தான் என்பதால் edit  செய்யப் படுகிறது ..


  3 மாதங்களுக்குப் பிறகு   

  சினிமாவில் வருமாறு எந்த திருப்பமும்  நிகழவில்லை  . வழக்கம் போல அந்தப் பெண் கல்யாணப் பத்திரிகை தந்து பக்கத்து மாநிலமான சிகாகோவில் பணிபுரியும்  "project manager ஐ " திருமணம் செய்து கொண்டு போய் விட  , இரண்டு பாட்டில் johny walker உடன் சபையை கூட்டி  ஆரம்பித்தேன் .அப்புறம் என்ன ஆச்சு மச்சான்ஸ் ??? 
               
                 ஆதலினால் காதல் செய்வீர் !!!( சேவல் பண்ணையில் இருக்கும் எங்களுக்கெல்லாம்  பின் எப்படி பொழுது போவதாம்? ) 

                                                                                                                       -பாவி 
                                                                                                                                            http://paavib.blogspot.com

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...