Tuesday, August 28, 2018

சமத்துவ நாயகன் !!! - Article published in commonsense magazine



கலைஞர் அவர்களின் சமூக நீதிக்கான பங்களிப்பின் சான்று - சமத்துவபுரம் திட்டம் .   கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் சாதனைகளாக பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படப்பட்டிருந்தாலும் சமத்துவபுரம் உருவாக்குவதற்கான காரணங்கள் , கலைஞர் அவர்களின் மதிநுட்பத்துக்கும் , நிர்வாகத்திறனுக்கும்  , தொலைநோக்கப்    பார்வைக்கும் , பற்றி எரியும்   ஒரு பிரச்சனையை ஒரு அரசு எப்படி அணுகி தீர்வு தந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வாய்ப்பாகவும் இருக்கிறது     .

 சமூக நீதிக்கான போராளியாகவே  ஆட்சியில் இருந்தபோதும் இல்லாத போதும் அவர் இருந்திருக்கிறார் . 
கொள்கைகளில் எந்த அளவுக்கு அவர் உறுதியாக இருந்தார் என்பதற்கு முன்னுதாரணமாய்  பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் உள்ளது .

சாதி பிரிவினை காலங்காலமாக இருந்து , அக்ரகாரம் ,    ஊர் , சேரி , ஒவ்வொரு  சாதிக்குமான தெருக்கள்  என கிராமங்கள் இருப்பிட வாரியாக பிரிந்து கிடக்கையில் இந்தியாவில் எந்தத் தலைவரும்  யோசனைக்கூட செய்யாத திட்டமாக அனைவரும் ஓரிடத்தில் வாழ சமத்துவபுரத்தை முன்வைக்கிறார் கலைஞர் . அதுவும் எப்போது ? தென் மாவட்டங்களில் சாதி கலவரங்கள் கொழுந்து விட்டு எரியும் சமயத்தில் அதற்கு தீர்வாக வைக்கிறார் .

அவர்  வைத்த தீர்வு  இருநூறுக்கும்   மேலான சமத்துவபுரங்களாய் , சமூக நீதிக்கும் , சாதி ஒழிப்பிற்குமான  கலைஞர் அவர்களின் அர்ப்பணிப்பை   பறைசாற்றும் விதமாக இன்றளவும் இருக்கிறது.

இந்த திட்டம் உருவான போது இருந்த கள நிலவரத்தை விரிவாக பார்ப்பது , எந்த சூழ்நிலையிலும் சமூக நீதி என்பதில் இருந்து கலைஞர்   பின்வாங்கவில்லை என்பதை உணர்வதற்கு எளிதாக இருக்கும் .

1967 திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்குவந்தபின் மெட்ராஸ் என்பது தமிழ்நாடாக பெயர் மாற்றம் செய்யப்படுகிறது .

பின்  தமிழர் , அவர்தம் வரலாறு   இதனை தொடர்ந்து வலியுறுத்த  எங்கும் தமிழ் , எதிலும் தமிழ் என்ற முழக்கத்துடன்  கழக ஆட்சி பல்வேறு  பெயர் மாற்றங்களை முன்னெடுக்கிறது , சேர , சோழ , பாண்டிய போக்குவரத்துக்கழகங்கள் என்று பேருந்துகள் மன்னர் பெயர்களில் போக்குவரத்துக்கழகங்கள் என்று மாறியதை   உதாரணமாய் சொல்லலாம் .

பின் 1977 இல்  எம்ஜிஆர்  அவர்களின் தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் ஆட்சியில் தமிழர் அடையாள பெயர்கள் என்றிலிருந்து தலைவர்களின் பெயர்களாக , பல்கலைக்கழகங்கள் , மாவட்டங்கள் மாறுகின்றன .திண்டுக்கல் அண்ணா மாவட்டமாகவும் , ஈரோடு பெரியார் மாவட்டமாகவும் , திருச்சி , கோவை பல்கலைக்கழகங்கள் , பாரதிதாசன் , பாரதியார் என உருமாறி  பெயர் மாற்றம் தொடர்கிறது . தலைவர்கள் பெயர்களில் இருந்து தனிமனிதர் பெயராக எம்ஜிஆர் அவர்களின் அம்மா சத்யா பெயரில் போக்குவரத்துக்கு கழகம் தொடங்க முன்னெடுப்புகள் நடக்கும்போது இது விமர்சனங்களுக்கு உள்ளாகிறது .

பின்  இந்த பெயர் மாற்றங்கள் எதற்காக  தொடங்கின என்பதில் இருந்து விலகி , மாற்றம் பெற்று  சாதி  பெயர்களாக , வோட்டு அரசியிலை குறி வைத்து மாறுகிறது , ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் ஆட்சியில் , திருச்சி பிரிக்கப்பட்டு முத்தரையர் மாவட்டமாகவும் , விழுப்புரம் ராமசாமி படையாச்சி யாகவும் பெயர் மாற்றம் கொள்கிறது . பின் அந்த போக்கு , பேருந்துகளுக்கும் வந்து     அழகு முத்து கோண் போக்குவரத்துக்கழகம் தொடங்கப்படுகிறது .

இப்படிப்  போகையில் சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகத்தை ஜெயலலிதா அறிவிக்கிறார் . அப்போது  தேர்தல் நேரம் அவரால் அதனை அறிவிப்பாக செய்ய முடிந்ததே தவிர செயல்படுத்த முடியவில்லை .

 தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு  , கலைஞர் அவர்கள் ஆட்சியில் அமர , ஏற்கனவே அறிவித்த  இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார் . 

வெடிக்கிறது தென் மாவட்டங்களில் கலவரம் , மாற்றுச்   சாதி அதுவும் தான் கீழாக நோக்கும் சாதி , அந்த சாதியை சேர்ந்த ஒருவரின் பெயரில் இருக்கும் பேருந்துகளுக்கு நான் போவதா என்ற எரியூட்டப்பட்ட  ஆதிக்க வெறி பேருந்துகளை எரிக்க வைக்கிறது   .சாதி கலவரங்கள் தேனீ , விழுப்புரம் மாவட்டங்களில் பரவுகிறது , இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்ட  இரு தரப்பு சாதிகள் , பிரச்சனையை மேலும் பெரிதாக்கும் வண்ணம்   இமானுவேல் போக்குவரத்து கழகம் , புலித்தேவன் போக்குவரத்துக்கழகம் வேண்டும்  என்று அரசை நிர்பந்திக்கின்றன .

இந்த சிக்கலான சூழ்நிலையில்  இதனை முடிவுக்கு கொண்டுவர  , மதிநுட்பத்துடன் , கலைஞர் ஒரே நாளில் 
பத்தொன்பது மாவட்டங்களின் பெயர்களையும் , இருபத்தி ஒன்று போக்குவரத்துக்கழகங்களின் பெயர்களையும் அதிரடியாக சாதி அடையாளம் , கட்சி அடையாளம் இல்லாமல்   மாற்றுகிறார் .   இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பினாலும் அவரின் உறுதியில் இருந்து பின் வாங்கவில்லை .

கலவரம் முடிவுக்கு வருகிறது , பிரச்சனை முடிந்தது என்று அப்படியே விட்டு இருந்தால் இது ஒரு சம்பவமாகத்தான் இருக்கும் , ஆனால்   ஒரு சம்பவத்தை வரலாறாக மாற்ற  கலைஞரை போன்ற  தலைவர்களால்  தான் முடியும் . 

கலவரம் அடங்கினாலும் , பதட்டத்தை  தணிக்கவும் , சாதி போக்கு ஒழியவும் , கலைஞர் அவர்கள் முன் வைத்த மகத்தான திட்டம்தான் சமதுவுப்புரம் .  அவர்  இந்த திட்டத்தை முன்வைத்தபோது  அவரைத் தவிர அனைவராலும் காகிதத்தில் நன்றாக உள்ளது , ஆனால் நடைமுறை சாத்தியம் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது .   ஓரே ஆண்டில் அதற்கு செயல் வடிவம் கொடுத்தார் கலைஞர் .

ஏனோதானோ  என்று அவசரகதியில் இவர் இந்த திட்டத்தை முன்வைக்கவில்லை ,எவ்வளவு விரிவாக திட்டம் தீட்டியிருக்கிறார் என்று பார்த்தால் வியப்பாக உள்ளது .  இந்த திட்டத்தின் பெயரையே பார்ப்போம் - சாதி 
 பிரிவினையே ஒழிக்க வேண்டும் என்பது  இந்த திட்டத்தின் நோக்கம் , இதற்கு சாதி ஒழிப்பிற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட  பெரியாரை நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதால் திட்டத்தின் பெயர்   "பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் "

சமதுவுப்புரத்தில் 

1 .அனைத்து சாதிகளுக்கும் சமஉரிமை 
2 .அனைவரும் , விழாக்களையும், திருமணங்களையும் நடத்துவதற்கு ஒரே  மண்டபம் .
3 .அனைத்து சாதிக்கும் ஒரு மயானம்தான்.
4 . சாதித்தலைவர்களின் சிலைகள் கூடாது 
5 . ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் 100  வீடுகள் இருக்கும் .அந்த நூறு வீடுகளுக்கும் வரைமுறையும் வகுத்துள்ளார் 
6 . 40 % தலித்துகளுக்கு 
7 .25 % பிற்படுத்தப்பட்டோருக்கு
8 .25 % மிகவும்  பிற்படுத்தப்பட்டோருக்கு
9 .10 % மற்றவர்க்கு 

இந்த விதிகளை மீறுபவர்களுக்கு , சமத்துவபுரத்தில் இடம் கிடையாது , வெளியேற வேண்டும்.

இதில் அதற்கும் மேல் என்னும் சொல்லும்படியாக இன்னொரு விதியையும் வைத்திருக்கிறார் , அதுதான் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு , இத்தனை விரிவாக   ஒரு திட்டத்தை  எந்த தலைவரும் மக்களுக்காக செய்தார்களா என்பது சந்தேகமே . 

 145  சமத்துவபுரங்கள் 1997 முதல் 2001 வரையிலான கலைஞரின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டன . தேர்தல் வர ஆட்சி மாறுகிறது , ஜெயலலிதா இந்த திட்டத்தை முடக்குகிறார் .

இதில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம் , தோழர் ஆளூர்  ஷா நவாஸ் அவர்கள் முன்வைக்கும் கோணம் , கலைஞர் அறிவித்த அனைத்து திட்டங்களையும் ஜெயலலிதா அவர்கள் முடக்கவில்லை , அவர் தினமும் சென்று வந்த பாலம் கலைஞர் கட்டியதுதான் அதனை அவர் முடக்கவில்லை , எந்த எந்த திட்டங்களை முடக்குகிறார் ?  சமத்துவபுரத்தை , சமச்சீர்கல்வியை , அண்ணா நூலகத்தை முடக்குகிறார் . எங்கெல்லாம் சமூக நீதிக்கென திட்டம் வகுக்கப்பட்டதோ , அந்த திட்டங்களை அவர் முடக்கியிருக்கிறார் . 

இந்தப் போக்கினை இனப்பகையின் நீட்சியாகவே நாம் காண வேண்டும் . அவர் தொடங்கியதை இவர் எதிர்த்தார் என்று நாம் இதனை காண இயலாது , 

பின் 2008 ஆட்சிக்கு வந்த கலைஞர் சமத்துவபுரத்தை மீண்டும் முன்னெடுக்கிறார் . 95  சமத்துவுப்புரங்கள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கிறார் . ஏன்   குறிப்பாக  95 ?  பெரியாரின் பெயரை திட்டத்திற்கு  வைத்த கலைஞர் ,  பெரியார் வாழ்ந்த ஆண்டுகளான 95  ஐ  நினைவுப்படுத்தும் வண்ணம்  95  சமத்துவுப்புரங்களை அறிவித்து , அறிவித்ததோடு   நில்லாமல்  தனது  ஆட்சி காலத்தில் அமைத்தும் வைக்கிறார்.

கலைஞர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து சொன்னது ,  "இந்த சமத்துவபுரங்கள் , தமிழ்நாட்டை ஒரு பெரிய சமத்துவபுரமாக மாற்றும் , நாடு முழுவதும் மாற்றம் உண்டாக இது முன்னோடியாக இருக்கும்  ". 

அவரின் கனவு நினைவாவதற்கு நடைமுறை சிக்கல்கள் உள்ளன , ஏனெனில் இன்றும்  பரவலாக மனிதர் நெருங்கினாலும், மனம் நெருங்காமல் இருக்கிறது . மனங்களை நெருங்க வைக்க திராவிடக் கொள்கை  பெரியார் , அண்ணா , கலைஞர் வழியில்   சமத்துவத்துக்கும் , சமூகநீதிக்கும்  தொடர்ந்து பயணிக்கும் . 
                                                                                    

                                                                                                                                                             

Thursday, August 2, 2018

ஆரிய மாயை - புத்தகம் பேசலாம் - பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் எனது பேச்சு


வணக்கம் தோழர்களே , இன்று நாம் பேசு பொருளாக எடுத்துக் கொண்டிருக்கும் நூல் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய  ஆரிய மாயை .”

மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய அண்ணாவின் சில நூல்களுள் இதுவும் ஒன்று ,
 இது கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காக அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டணையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

இந்த நூலுக்காக தொடுக்கப்பட்ட வழக்கைப் பற்றி அண்ணாவே ஒரு மேடைப் பேச்சில் இப்படி குறிப்பிடுகிறார்.
ஆரிய மாயை வழக்குக்காக பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். ஆரிய மாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரிய மாயை, இலட்சிய வரலாறு, இராவண காவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி

ஆரிய மாயை  இதனை ஒரு புத்தகம் என்று கூறுவதை விட பல புத்தகங்களின்  தொகுப்பு என்று கூறலாம்   ,   96  பக்கங்களை மட்டுமே உடைய  இந்நூலில்  படிக்க ஆரம்பித்தால் பக்கத்துக்கு பக்கம் விரிவடைகிறது அண்ணா என்ற மனிதரின் அறிவு விசாலம் .  அனைத்து  புத்தங்களையும்  எப்படியும்   படிக்க முடியாது  , எண்ணிப் பார்ப்போம் என பட்டியலிட்டேன் , 30  புத்தகங்களின் மேற்கோள்களை சுட்டிக் காட்டுகிறார் , இவை மட்டுமில்லாமல் , இரண்டு வழக்குகளின் சாரத்தையும் , சமகால பல்வேறு மேடைப் பேச்சுக்களையும் இதனில்  மேற்கோள் காட்டுகிறார் .

இந்த நூல் நான்கு தளங்களை கொண்டுள்ளது

1 . ஆரியம் , திராவிடம் என இரண்டு இனங்களின் இயல்புகள்
2  எவ்வாறு இவை வேறுபடுகிறது  என்பதற்கான  விளக்கங்கள்
3  ஒரு இனம் இன்னொரு இனத்தில் எப்படி ஊடுருவுகிறது என்பதற்கான வரலாற்று நிகழ்வுகள்
4 பின் காலம் காலமாய் எதனைக் கொண்டு அடிமைப் படுத்தி வைத்திருக்கின்றது என்ற ஆய்வுகள்

 இறுதியாக நூலாசிரியர் , தான் சொல்வதை படிப்பதோடு நின்றுவிடாமல் தான் மேற்கோள் காட்டிய அனைத்து நூல்களையும் படித்து , புரிந்து கொண்டு , அறியாமையில் இருந்து  விடுபட்டு , பிறருக்கும் எடுத்துரைக்குமாறு வலியுறுத்துகிறார் . 

இதில் கவனிக்கப்படவேண்டிய அம்சம்  , அண்ணா தன்  கருத்தை எங்கும் திணிக்கவில்லை , தான்  சொல்வது  மட்டும்தான் சரி என்றும் கூறவில்லை , தன் கருத்தை தீவிரமாக வைக்கும் அவர் , நம் முடிவை அவர் சொன்ன  நூல்களைப் படித்து புரிந்து கொள்ளச் சொல்கிறார்.

பெருவாரியாக மேற்கண்ட நான்கு அம்சங்கள் நூல் முழுவதும் பேசப்பட்டிருந்தாலும் , அண்ணா வைக்கும் இரண்டு கோணங்கள்  படிப்பதற்கு  புதுமையாக   இருந்தது.

முதலாவது,
,  இந்நூல் எழுதப்பட்ட காலம் 1943  இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பேச்சுக்கள் பரவலாக  தலைதூக்க தொடங்கியுள்ளது . அண்ணா இப்படி எழுதுகிறார் , ஐரோப்பாவில் இருந்து பயணம் செய்த ஆரிய இனம் ,
அங்கு பூர்வ குடிகளாக இருந்த மற்றொரு இனமான  சால்தியன் இனத்தை (தற்போதைய இஸ்லாம் ) தாண்டி இந்தியாவின் வடபகுதியில் தன் ஆதிக்கத்தை நிறுவுகிறது , ஆதிக்கம் நிறுவியபின் ஒரு பக்கம் தான் தாண்டி வந்த இனம் , இன்னொரு பக்கம் வலிமையான ஊடுருவ முடியாத திராவிட இனம் , இரண்டையும் வெற்றிகொள்ள  திராவிடத்திற்கு , இஸ்லாம் பகை என்று நிறுவிட முயற்சிக்கும் என்கிறார் . ஒரு படி மேல் சென்று திராவிடஸ்தான் என்பதின் வடநாட்டு பதிப்பே பாகிஸ்தான் என்கிறார் . இது நான் இந்த நூலை படிக்கும் முன்பு எங்கும் கேட்டதில்லை .

இரண்டாவது
ஆரிய இனம் , பௌத்த மதத்தை தன் எதிரியாக பாவித்தது , அதனை அழிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என்ற கோணத்தையும் அண்ணா வைக்கின்றார் , அம்பேத்கர் , இந்து மதத்தில் இருந்து பௌத்தம் மாறியதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு  இருக்கிறதா என்று தெரியவில்லை  . ஏன் பௌத்தத்தை ஆரியம் எதிரியாக பார்த்தது என்ற கேள்வி எழுகிறது .இதனைப்   பற்றி அறிந்த தோழர்கள் விளக்கவும்..

நான்கு தளங்களுக்கும் வகைக்கொரு எடுத்துக்காட்டை  நூலில் இருந்து எடுத்து பேசலாம் என இருக்கிறேன் .

முதல் தளம் :

இரண்டு இனங்களின் இயல்புகள் .

இதனை பாட்டாகவே படித்து விட்டார் அண்ணா  , ஆரிய இனத்தின் இயல்பாக 

பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேசநா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே போற்றி போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய், போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஓட்டுவித்தை கற்றோய், போற்றி!
உயர் அநீதி உணர்வோய், போற்றி!
எமதுஇனம் கெடுத்தோய், போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரைஇதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!
இதனை தான்  சொந்தமாக எழுதவில்லை என்று சொல்லும் அண்ணா , ஆரிய இனத்தின் இயல்புகளைப் பற்றி  எழுதப்பற்றிருக்கும்  Hindu Manners  Custom and Ceremonies”  என்ற நூலை மேற்கோள் காட்டுகிறார்.
திராவிட இனத்தின் இயல்பாக , இவ்வினம்  அவதார புருடர்களை நம்பிக்கொண்டோ , அற்புதங்களை , யோகங்களை நம்பிக் கொண்டு வாழ வில்லை  , வேள்விகளால் வெற்றி , பரமன் அருளால் பலம் , மாய அஸ்திரங்களால் எதிரி தோற்பான் என்றெல்லாம் நம்பிக்கொண்டு இருக்க வில்லை
வீரத்தையும் , அறிவையும் மட்டுமே நம்பி இருந்தது என்பதற்கு சிலப்பதிகாரத்தில் இருந்து
“மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்   எனத் தொடங்கும் சிலப்பதிகார பாடலை  குறிப்பிடுகிறார் .
பலவிதமான இயங்கு பொறிகளை கொண்டு தமிழர் போரிட்டனர் என இப்பாடல்  விளக்குகிறது .

இந்த இரு இனங்களும் எவ்வாறு வேறுபடுகின்றன என இந்நூலில் குறிப்பிடபட்டுள்ளவையை  பார்ப்போம்

கி மு 3000 முதல் 1500 வரை  தெய்வ வழிபாடு என்பது புதிய முறையை அடைந்தது . நெருப்பின் மூலம் கடவுளை தொழுதலே அம்முறை , இதை ஒப்புக் கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும் , ஒப்புக்கொள்ளாதவர்கள் திராவிடர்கள் என்றும் ஆனார்கள் .

நான்கு வருண பேதங்கள் - ஆரியம் பரவுவதற்கு முன் இந்தியாவில் இல்லை .  முல்லை , நெய்தல் , மருதம்  , குறிஞ்சி என நால்வகை நிலங்களில் வாழ்ந்தவர்கள்   என்று மக்கள் அறியப்பட்டனரே தவிர வருண பேதங்கள் இல்லை .

பிரேதத்தை எரிக்கும் வழக்கம் ஆரியம் பரவியதற்கு பின் தான் ஏற்படுகிறது .
கிமு 750  முதல் 320 வரை , மதம் மனித வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கிறது , அரசர்களும் வுடிய மடங்களை உருவாக்கி அரசாங்க வருமானத்துக்கு வழி தேடினார்கள் .  ஆரிய இனத்தாரின் மூலம் தான் மோட்சம் கிடைக்கும் என்ற கோட்பாடு உருவாகிறது .  பின் அது விக்கிர வழிபாடாக மாறுகிறது . சமஸ்கிரத மொழி ஆதிக்கம் பெறுகிறது .

இதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சமணமும் , பௌத்தமும் ஆரம்பிக்கிறார்கள் .  பௌத்தர்கள் எழுதிய பாலி மொழியும் , சமணர்களின் அர்த்த மகதி   மொழியும் உண்டாகிறது ,   இத்தகைய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கையில் தென் நாடு தனி நாடாகவே உள்ளது .
 வடநாட்டு அரசர்களும் , மக்களும் ஆரியத்தை பின்பற்றினாலும் , தென் நாடு  எந்த பேரரசாலும் கைப்பற்றப்படாமல்  தனி ஆளுமையாகவே இருந்துள்ளது . ஆரியத்தை பின்பற்றிய பேரரசுகள் பல முறை போர் தொடுத்தாலும் திராவிடத்தை கைப்பற்ற முடியவில்லை . திராவிடம் தனி நாடாகவே இருந்து வந்தது என்பதை சரித்திர இலக்கிய ஆதாரங்களை கொண்டு அண்ணா விளக்குகிறார் .
பின் எப்படி ஆரியம் ஊடுருவிகறது ? என்பதை விளக்க  1923 இல் வெளிவந்த  "இந்திய சரித்திரம் " நூலை மேற்கோள் காட்டுகிறார் அண்ணா
கிமு 320 முதல் 230 வரை :
 தமிழகத்தில் இருந்த மூவேந்தர்களின் ஆட்சியில் தமிழக வாணிபம்  பல்வேறு நாடுகளுடன் தொடர்பு கொள்கிறது , ஆரியமயமாக்கப்பட்ட வட இந்திய  ராஜ்யங்களுடனும் இது நடக்கிறது , அப்போது ஆரிய இனத்தவர் , மன்னருக்கு அறிவுரை    கூறுபவர்களாகவும் , மந்திரிகளாகவும் இருக்கின்றனர் , அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மன்னர்களின் செல்வாக்கு அடைகிறார்கள்.

தமிழ் மன்னர்களுக்கு யாக முறையில் ஆசை பிறந்தவுடன் , அவர்கள் உண்டாக்கிய சந்திர , சூரிய வம்சத்தில் தாங்களும் வர வேண்டும் என்ற வேட்கை பிறந்து ஆரிய கோட்பாட்டில் மயங்குகிறார்கள் ,ஆனாலும் மன்னர்கள் தான்  கடை பிடித்தார்களே தவிர மக்கள்  ஏற்கவில்லை

பல்லவர் ஆட்சி தமிழகத்தில் தொடங்க , கிபி 150 - தமிழகம்  பல்லவர் ஆட்சியில் மாறுகிறது , அவர்கள் வட இந்தியாவில் இருந்த அரசியல் முறையை தமிழ்நாட்டில் புகுத்தினார்கள் . தமிழக மக்களும் யாகத்தை நம்ப ஆரம்பிக்க ராமாயணம் , மஹாபாரதம் , மனுதர்ம சாஸ்திரம் என அனைத்தும் வருகிறது , திராவிடம் மறைக்கப்படுகிறது.

 இப்படி ஊடுருவிய ஆரியம் மந்திரம் , யாகம் , மூட நம்பிக்கைகள் , கடவுள் கதைகள், மேலே ஏழு , கீழே ஏழு என பதினான்கு உலகங்கள் , நாலு தலை சாமி , மூணு தலை சாமி என்ற பலவிதமான புராண அட்டவணைகள் போன்றவற்றை வைத்து  உளவியல் கொண்டு அடிமையாகவே வைத்துள்ளனர்  .
போதை  ஏறியவன் கல் தடுக்கியோ , காற்று அடிப்பதாலோ கீழே விழுவான் . ஆரியரும் திராவிட இனத்தாரிடையே கருத்தில் போதை மூண்டிடச் செய்து விட்டு பிறகு கீழே உருட்டி விட்டனர் . திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆனால் வீழ்ந்தவர்  , வீழ்ந்தவராகவே இருக்கிறார் , அறியாமையை விட்டு மேலே வர வேண்டும் என்று கவலை கொள்கிறார் அண்ணா .

ஆக,
பல்வேறு
அடுக்குகளைக்   கொண்டு , ஒன்றிணைந்து எதிர்ப்பதை  தடுக்கும்  நோக்கத்துடன் , ஒவ்வொரு   அடுக்கிலும் பல பிரிவுகளையும் வகுத்து , உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தி என்னை விட நீ தாழ்ந்தவன் என்ற  எண்ணத்தை விதைக்கும் எதுவும்  " அது மதமானாலும் ,  இனமானாலும் , சாதியானாலும் ,    கொள்கையானாலும்   , கட்சியானாலும்   ஆரியம்தான் , 

இதனை   அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் .   அதனை அறிவின் மூலம் பகுத்தறிந்து , யாரும் எனக்கு மேல் இல்லை , எனக்கு கீழும் எவருமில்லை , அனைவரும் சமம் என்பதே திராவிடம்  .
வாருங்கள் தோழர்களே  , அறிஞர் அண்ணா காட்டிய வழியில் , உளவியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட மாயையில் இருந்து விலகுவோம் , 

. நன்றி வணக்கம்


You tube link for this speech and Q&A by Thozars

https://www.youtube.com/watch?v=OEjBSqeFAPk&feature=em-uploademail




https://www.youtube.com/watch?v=OEjBSqeFAPk&feature=em-uploademail

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...