Friday, October 4, 2019

குறுந்தொகை குறிஞ்சித்திணை 142 வது பாடல்


பாடல் காட்சி 

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர்




தோழியிடம் தலைவன் கூறுவதாக வருவது , அதிகம் வராத  காட்சியாக இருக்கிறது , இந்தப்  பாட்டில் வருகிறது , தொடர்ந்து படித்தால்  மற்ற பாட்டுகளில் வரலாம் 


இப்படலை எழுதியவர் :  கபிலர்


விளக்கம்
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே-பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!

நாலாவது வரியில் இருந்து இந்த பாட்டை பார்ப்போம்

பானாள் பள்ளி யானையின் உயிர்த்து  -

பானாள் -  நடு யாமத்துப்
பள்ளி யானையின் - படுத்துத் துயிலுதலையுடைய யானையைப் போலப்
உயிர்த்து - பெருமூச்சு விட்டுக்கொண்டு

என் உள்ளம், பின்னும், தன் உழையதுவே
என் உள்ளம் - எனது நெஞ்சம்,
 பின்னும் - நான் தலைவியைப் பிரிந்து வந்த பின்னரும்
தன் உழையதுவே - அவளிடத்திலே இருக்கின்றது;  தலைவி கிட்ட இருக்கிறது

அந்த தலைவி எப்படி பட்டவங்கனு  விளக்கறாங்க பாருங்க

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,

சுனைப்பூக் குற்றுத் - சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து,

தொடலை தைஇ -   - மாலையைக் கட்டி

புனக் கிளி கடியும் பூங் கட் பேதை

புனக் கிளி கடியும் -
புனம் - மலையில் இருக்கிற கொல்லை  , தோட்டம், 
கிளி கடியும்  -கதிரை உண்ணும் பொருட்டு வரும் கிளிகளை ஓட்டுகின்ற , 

பூங் கட் பேதை
பூவைப் போன்ற கண்ணையுடைய பேதையாகிய  அத்தலைவி

தான் அறிந்தன்றோ இலளே  - 

இதனை அறிந்தாளோ இல்லையோ! 
என் மனது யானை மாதிரி அவள் இருக்குமிடத்திலயே பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறது என்பது தெரியுமா , தெரியாதா  , அப்படினு தோழிகிட்ட  குறை சொல்வதுதான் இந்தப்  பாடல்

பாடல் மறுபடியும்

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே-பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!

குறுந்தொகை குறிஞ்சித்திணை 141 வது பாடல்

பாடல் காட்சி 

" இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகுந் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சிப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அது [வு] மறுத்துச் சிறைப் புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. "

தலைவரை இனிப் பகற்குறிக்கண் வரும்படி நீ சொல்ல வேண்டும்.


இப்பாடலை  எழுதியவர் : மதுரைப் பெருங் கொல்லன் 

மதுரை பெருங்கொல்லன் என்பதில் மதுரையில் உள்ள புகழ்மிக்க கொல்லன் அல்லது கொல்லர் குழுவின் தலைவன் (guild chief) என்று கருதவேண்டியுள்ளது.  மதுரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ச்சியாக மக்கள் வாழும் ஊராக உள்ளதா , இல்லை இது வேற மதுரையா எனத் தெரியவில்லை.

விளக்கம் :

வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
 செல்கென் றோளே யன்னை யெனநீ
  சொல்லி னெவனோ தோழி - கொல்லை
  நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
   பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
    ஆரிரு ணடுநாள் வருதி
    சார னாட வாரலோ வெனவே.

மலைப்பக்கத்தையுடைய நாட்டில் உள்ள  தலைவன்   , தலைவியை இரவில் சந்திக்க எதையெல்லாம் தாண்டி வருகிறான் என்பதை
பாட்டின் நாலாவது வரியில் இருந்து  தலைவி சொல்வது


'கொல்லை
நெடுங்கை வன் மான் கடும் பகை உழந்த

நெடுங்கை வன்  மான் -
 நெடிய கையையுடைய  யானையால்

கடும் பகை உழந்த - கடிய பகையினால் வருந்திய

குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை – குறிய கையையுடைய கொல்லுதல் வல்ல பெரிய ஆண்புலியானது,

பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்

பைங்கட் செந்நாய் - சிய கண்ணையுடைய செந்நாய்
படுபதம் பார்க்கும்  - அகப்படுகின்ற காலத்தை  பார்த்திருக்கும்

ஆரிரு ணடுநாள் வருதி  - அந்த நேரத்தில் இருளையுடைய நடுயாமத்தில் வருகின்றாய்

வாரலோ வெனவே -  அப்படி வருவதை விட்டு விட்டு


வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
 
வளைவாய் சிறுகிளி - வளைந்த அலகையுடைய சிறு கிளிகளை

விளைதினைக் கடீஇயர்  - விளைந்த திணைகளை  சாப்பிடாமல் விரட்டும் பொருட்டு

செல்கென் றோளே யன்னை

நம் தாய், செல்க என்றாள்
யெனநீ
    சொல்லி னெவனோ தோழி

என்று நீ  தலைவனுக்கு சொல்வதால் வரும் குற்றம் என்ன ?

இரவில் வர வேண்டாம் , பகல்ல நான் தோட்டத்திலதான் இருப்பேன் , அப்ப சந்திக்கலாம்னு  தலைவன்கிட்ட தோழியை விட்டு சொல்லும் பாட்டு தான்  இது .  ஒரு பாட்டு எப்படி காட்சிகளை கொடு வருது பாருங்க , காட்டுப் பாதை ,  பெரிய யானை , அந்த யானையை தாக்கும் அளவுக்கு புலி , செந்நாய் , இவற்றுக்கு நடுவில் மக்கள் இருந்திருக்காங்க , உள்ளம் நிறைய நிறைய காதலுடன் . ஊருக்குள்ள ஒரு யானை வந்துருச்சுனா அலறி அடித்து இப்ப ஓடுறோம் , என்ன செய்ய வேண்டும் என்ற அறிவோ , புரிதலோ இல்லை . நாமளும் பாவம் , யானையும்  பாவம் .


பாட்டு மறுபடியும்


 வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
 செல்கென் றோளே யன்னை யெனநீ
  சொல்லி னெவனோ தோழி - கொல்லை
  நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
   பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
    ஆரிரு ணடுநாள் வருதி
    சார னாட வாரலோ வெனவே.  

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...