Monday, July 29, 2019

பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் இணை அமர்வு - பெட்னா 2019 சிகாகோ




சிகாகோ நகரில்   10 வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு , பேரவையின் 32 வது விழா , மற்றும் சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா என  முப்பெரும் விழாவாக நடைபெற்ற நிகழ்வில்   பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக , நூற்றுக்கும் மேற்பட்ட  பங்கேற்பாளர்களை கொண்டு அரங்கம் நிறைந்த சிறப்பான இணை அமர்வை நடத்தி முடித்தது .

முத்தமிழர் அறிஞர் கலைஞர் மறைந்தபின் நடந்த முதல் இணை அமர்வில் , கலைஞரின் புகழ் வணக்கதோடு அமர்வு தொடங்கியது .

முதன்முறையாக பெரியார் மற்றும் அம்பேத்கரின் நட்பு சிலையை பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்  , சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  கவிஞர் சல்மா அவர்களை கொண்டு வெளியிட்டது.

முதல் சிலையை சல்மா வெளியிட தோழர் சிவானந்தனும்  , இரண்டாவது  சிலையை  சிக்காகோவின் தமிழ் பள்ளிகளில் தொடர்ந்து செயலாற்றுபவரும் , ஆசிரியர் வீரமணி அவர்களின் மகளுமான அருள் செல்வி அவர்கள் வெளியிட தோழர் சுதாகரும் , மூன்றாவது சிலையை  பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சோம இளங்கோவன் வெளியிட தோழர் வினோத்சந்தரும் பெற்றுக்கொண்டனர் .

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தோற்றமும் , செயல்பாடுகளையும் தொகுத்து தோழர் கனிமொழி அவர்கள்  முன்னுரையாக வழங்கினார் .

 அடுத்த நிகழ்வாக சிறப்பு விருந்தினர் சல்மா அவர்கள்  சிலை வெளியீட்டுக்கு பாராட்டியும் , தந்தை  பெரியார் அவர்கள் பெண்ணுரிமைக்காக ஆற்றிய செயல்களையும் , சுயநலமில்லாமல் , எதிர்பார்ப்பில்லாமல் மக்களுக்கு தொண்டாற்றியதையும் , மதத்திற்கு எதிரானவர் என்று பெரியாரை பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உடைக்க செயலாற்றுவதின் அவசியத்தையும் ,அம்பேத்கரையும் , பெரியாரையும் எதிர்நிலைக்கு கொண்டு சென்று நமக்குள் பிரிவினையை உண்டாக்கும் சக்திகளை எதிர்த்து செயலாற்ற வேண்டிய நிலையையம் ,  தேர்தல் முடிவுகளின் அதிர்ச்சியால்  தமிழ்நாட்டில் ஊடுருவி கைப்பற்ற துடிக்கும் RSS இன் சூழ்ச்சிகளையும்  , சாதிய வெறியால் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளைப் பற்றியும் ,இவைகளை முறியடிக்க பெரியார் ,அம்பேத்கர்- இந்த இரு தலைவர்களின் சிந்தனைகளை முன்னெடுத்து செல்ல உறுதிமொழி எடுக்க  வேண்டும் என உரையாற்றினார் .

அடுத்தபடியாக பேச வந்த அருள் செல்வி  அவர்கள்  குழந்தைகளுக்கு பெரியார் அவர்களின் கருத்துக்களை , அவர்களுக்கு புரியும்படி கொண்டு செல்ல செயல்படுமாறு  அறிவுறுத்தினார் .மேலும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் Humanist  Conference இல் பங்கேற்க அழைப்பு விடுத்தும் , பெண்கள் அதிகமாக  இணை அமர்வில் கலந்து கொண்டிருப்பதினால் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார் .

தோழர் கார்த்திகேயன்  அமெரிக்காவில் நிகழும் சாதிய பாகுபாட்டை இளைஞர்கள் ஆதரிக்கவில்லை என்றும் , பெரியாரின் கோட்பாடுகளை அவர்கள்தான் எடுத்து செல்கிறார்கள் என்றும் , கலைஞர்  அவர்களின் சமூக நீதி செயல்பாடுகளை எடுத்துச் சொல்லி , கலைஞரின் புகழ் வணக்கத்தை மீண்டும் ஒருமுறை கூறிச்சென்றார் .

பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சோம இளங்கோவன்  பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கு ஒவொருவரும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து  செயல்படுமாறு கூறினார் .

ஜெர்மனியின் மருத்துவர் Ulrike Niklas  அவர்கள் பெரியாரின் கருத்துக்களை , ஆங்கிலம் , ஜெர்மன் முதலிய மொழிகளில் மொழிபெயர்த்து  மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் , பள்ளி குழந்தைகளுக்கு பெரியார் கருத்துக்களை தாம் எடுத்துச் செல்வதாகவும் , மாணாக்கருடன் இந்தியா செல்லும்போது திடலுக்கு கூட்டிச்  சென்று  காண்பிப்பதாகவும்  அவர் கூறினார்.

முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் பேசும்போது இயல் இசை நாடகம் மூலமாக  ஏறி வந்த மதத்தை , அதே இயல் , இசை நாடகம் கொண்டு  பெரியாரிய கருத்துக்களை  முன்னெடுத்து சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார் , பெரியார் பிஞ்சு இதழ் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் கையில் இருக்க வேண்டும் என்றார் அவர் .

முனைவர் இளங்கோவன் அவர்கள் பேசும்போது தொழில் நுட்ப கருவிகளின் துணை கொண்டு  இயக்கம் சார்ந்த கருத்துக்களை , இணைய  வழியாக , பயிலரங்கம் வாயிலாக  கொண்டு செல்வதாக கூறினார்.

 அமர்வின் சிறப்பு நிகழ்வாக பெரியார் பிஞ்சுகள் சிறுவன் இலக்கணன் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடலையும் , ஆதவன் திருகுறள்களையும் தமது மழலைக் குரலில்  கூறினர்

வருகை தந்தவர்கள் அனைவருக்கும்  பெரியார் சிந்தனைகள் தாங்கிய புத்தகங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டது .

பின் , விழாவில் பங்கேற்றவர்கள் , பெரியார் கருத்துக்களை கொண்டு செல்ல தாம் என்ன செய்ய போகிறார்கள் , செய்தார்கள் என்பதை உணர்ச்சிபூர்வமாக விளக்கினர்.கிராமப்புறங்களில் பெரியார் கருத்துக்களை கொண்டு செல்லுதல் , சுணக்கமின்றி தொடர்ந்து போராடுதல் , பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் இனத்தில் பாகுபாடு காட்டாமல் இருத்தல் ,பெரியார் கருத்துக்களை கலையாக, சித்திரங்களாக , கதையாக கொண்டு செல்லுதல் , இளைஞர்கள் பெரியாரை படிக்க வேண்டும்  , பள்ளிகளுக்கு பெரியாரின் கருத்துக்களை, திருகுறளோடு சேர்த்து   எடுத்து செல்ல வேண்டும்  போன்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர் .

அவர்கள் கூறிய கருத்துக்களின் உத்வேகத்தோடு  தொடர்ந்து செயலாற்றும் முனைப்புடன் இணை அமர்வு முடிவு பெற்றது

வாழ்க பெரியார் !!!               வளர்க பகுத்தறிவு !!!!

No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...